அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகரிக்கப்பட்ட அதிகமான வட்டி விகிதம் இதுவாகும்.
உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்கா 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணவீக்கத்தினை எட்டியது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
வட்டி அதிகரிப்பு
எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பணவீக்கத்தினை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் இருந்து பின் வாங்க போவதில்லை என தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளது. இதற்கிடையில் தான் எதிர்பார்ப்பினை போலவே வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதுமட்டும் அல்லது மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற சூழ்நிலையே இருந்து வருகின்றது.
பொருளாதாரத்தில் தாக்கம்
அமெரிக்கா மத்திய வங்கியின் இந்த முடிவால் பணவீக்கத்தின் தாக்கம் குறையலாம் என்றாலும், மறுபுறம் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்த வட்டி அதிகரிப்புக்கு பிறகு நாங்கள் பணவீக்கத்தினை 2% கீழாக கொண்டு வருவதில் தீர்க்கமாக உள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதிபட அமெரிக்க தரப்பில் கூறப்படுகின்றது. ஆக வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கலாம் என்பதும் இதன் மூலம் இன்னும் தெளிவாகிறது.
உறுதி
பவலின் உரையில், விலையில் நிலையான தன்மை இல்லை எனில், அது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்காது. ஸ்திரத்தன்மை இல்லாமல், வலுவான தொழிலாளர் சந்தையில் சாதகமான வளர்ச்சியினை எட்ட முடியாது என கூறினார். மேலும் பணவீக்கத்தினை 2% கீழாக கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பு
இம்மாத தொடக்கத்தில் இருந்தே நிபுணர்கள் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதேபோல அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்து வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சத்தில் பணவீக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 8.3% ஆக இருந்தது. இது எதிர்பார்க்காத அளவுக்கு உச்சம் எட்டியிருந்தது. இதற்கிடையில் தான் மத்திய வங்கியானது இத்தகைய கட்டுப்பாடுகளை எடுத்துள்ளது. இது மற்ற நாடுகளின் மத்திய வங்கியினையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.