அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்த தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் ஈரானும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டாமல் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Tanker-for-Tanker என்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டின் டேங்கர் கப்பல்களை தாக்குவது என முடிவு செய்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள லாராக் தீவு பகுதியில், ஈரான் படையினர் கடல் கண்ணிவெடிகளை ஏற்றி செல்லும் ராக்கெட் லாஞ்சர்களை தயார்படுத்தி கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் அவற்றை தாக்கி அழித்தன என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தக்க பதிலடி தரப்படும் என கூறியுள்ளது. முன்னதாக ஜோர்டனில் உள்ள கிங் ஹூசைன் மற்றும் அல்-அஸ்ராக் உள்ளிட்ட அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்கா மற்றும் ஈரான் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில் நேற்று முதல் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளன. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இரு தரப்பும் விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக உள்ளன.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்கா தற்போது ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் கடற்படை முற்றுகையையும் தீவிரப்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்து வருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் ராணுவ தாக்குதலும் பொருளாதார அழுத்தமும் தருவது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அதே வேளையில் ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா முழுமையாக திரும்பினால் மட்டுமே தாங்கள் ஒத்துழைப்போம் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் இடைக்கால ஒப்பந்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் நேரடி ராணுவ மோதலுக்கு தள்ளப்பட்டுள்ளது உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

