சில மாதங்களாக தாக்குதல் நடத்தாமல் அமைதியாக இருந்த அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள லாரக் தீவில் அமைந்துள்ள ஈரானின் ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. கிட்டதட்ட ஒரு மாத காலத்திற்கு பின் அமெரிக்கா நடத்தும் முதல் நேரடி ராணுவ தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி தந்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை தாங்கிய ராக்கெட்டுகளை ஏவ தயாராகி வருவதை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை குழுவின் செய்தி தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஈரான் வைத்திருந்த கடல் கண்ணிவெடிகளை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் தான் முழுமையாக அகற்றியிருந்தது. இந்த சூழலில் ஈரான் மீண்டும் தாக்குதலுக்கு முயன்றதால், அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையை சேர்ந்த வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன், இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் சூளுரைத்துள்ளது. அமெரிக்காவின் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இய்தனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உண்டாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28இல் திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தின. இதனை அடுத்து கடுமையான போர் ஏற்பட்டது. இதில் அயத்துல்லா அலி கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். மிக தீவிரமாக 3 மாத காலம் போர் நடந்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இந்தியா உட்பட பல நாடுகளீல் கச்சா எண்ணெய், எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில் பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தது. ஆனால் ஈரானும் அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தை மதிக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வந்தன. இருந்தாலும் தீவிரமான தாக்குதல் இல்லை. ஜூன் மாதம் மீண்டும் போர் மூண்டு பின்னர் தணிந்தது. தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
அண்மையில் தான், ஈரான் மீதான போரை முடிக்க நேரடி ராணுவ நடவடிக்கைகளைவிட பொருளாதார அழுத்தங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. குறிப்பாக, ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடுகள் அல்லது நிறுவனங்கள் மீதும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
பல மாதங்களாக நீடிக்கும் போரினால் அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்து வந்ததே இதற்கு காரணம் என சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா திடீரென தாக்குதல் நடத்தி தனது உத்தியை மாற்றியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்பட்டது.
முன்னதாக ஓமன் நாட்டுடன் ஈரான் ஒப்பந்தம் எட்டியிருந்தாலும், தாங்கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா போரை நிறுத்தும் வரை அந்த வழித்தடத்தை கப்பல்கள் அனுமதிக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த பரஸ்பர தாக்குதலை தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 2.35% உயர்ந்து 85 டாலருக்கும் மேல் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெ விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் ஈரான் போரால் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்படவும் தங்கம் விலை சரியவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

