அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தன. இந்த போர் மூன்று மாதங்கள் மிகத்தீவிரமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் முன்னிலையில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது.

இரு நாடுகளும் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது மற்றும் நிரந்தர அமைதி உடன்படிக்கையை 60 நாட்களுக்குள் எட்டுவது, ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா நீக்குவது, முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பது, ஈரான் அணு ஆயுதங்களை கைவிடுவது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகின.
ஆனால் ஜூன் மாத இறுதியில் இருந்தே, இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மீறி பரஸ்பரம் தாக்குதல் நடத்த தொடங்கின. டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீதான தடைகளை முழுமையாக நீக்கவில்லை. மேலும், ஈரானுக்கு மறுசீரமைப்பு நிதியை வழங்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஈரானின் நடவடிக்கைகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் செல்லாது என்று ஈரான் அறிவித்தது. இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடக்கவில்லை. சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடே எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில் ஜூன் மாத ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களை அதிகரித்து வருகிறது.
மீண்டும் இரு நாடுகளும் ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்ளுமா, அல்லது மீண்டும் இரு நாடுகளும் போரில் ஈடுபடுமா என்ற பதற்றம் மத்திய கிழக்கில் நீடிக்கிறது. இந்த போரில் இரு தரப்புக்குமே ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு பெரிய சண்டை இல்லாமல் மவுனம் காக்கின்றன. இது என்ன ஆகும் என்பது வரும் நாட்களீல் தான் தெரிய வரும். ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற முடிவு கிடைக்கும் வரை விட்டு விட்டு போர் நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

