சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தக பிரச்சனையினை முடித்துக் கொள்ள, அமெரிக்காவும் சீனாவும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் மறுபுறம் புதிய புதிய பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் உருவாகி வருகின்றன.
அமெரிக்கா சீனா இடையே எப்போது தான் பிரச்சனை இல்லாமல் இருந்துள்ளது, ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பிரச்சனைகள் தொடங்கிய நிலையில், இன்று எது எடுத்தாலும் பிரச்சனையாக மாறிக் கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளை சுமூக நிலைக்கு கொண்டு வர, இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் தோற்று போகவே செய்கின்றன.
சீன நிறுவனத்திற்கு தடை விதிக்க ஆலோசனை
இதற்கிடையில் தற்போது சீனாவின் மற்றொரு மிகப்பெரிய நிறுவனத்திற்கு தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதிக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் டெக் ஜாம்பவான் ஆன ஹூவாய் நிறுவனத்தினை தடை செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சீனா நிறுவனத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவது, மீண்டும் இவ்விரு நாடுகளுக்கு இடையே பிரச்சனையை அதிகரிக்கலாம்.
தடை பட்டியல்
அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, சீனாவின் SMIC நிறுவனத்தினை பற்றி விவாதித்து வருவதாக இதனையறிந்த அதிகாரிகள் கூறியதாக சிஎன்பிசி கூறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் நிறுவன பட்டியலில் 300 -கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் உள்ளன. ஆக இனி மேற்கொண்டு SMIC-யின் அனைத்து ஏற்றுமதி உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
சீனா நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான தொழில்நுட்ப போரில் இது பெரிய மாற்றத்தினை உருவாக்கும். இது மேற்கொண்டு சீன நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களின் முக்கிய தகவல்களை சேகரிப்பதாக நீண்டகாலமாக புகார் இருந்து வருகிறது.
இது பொய்யான அறிக்கை
ஆனால் இது குறித்து தனது கருத்தினை தெரிவித்த எஸ் எம் ஐ சி, தங்களுக்கும் சீன ராணுவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டுகள், தவறான அறிக்கைகள் எனவும் SMIC தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நிறுவனங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா சீனா வர்த்தக போரினால் சீனாவின் உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தி வளர்ச்சியில், SMIC முக்கிய பங்கு வகிக்கிறது. இது அமெரிக்காவின் சிப் தயாரிக்கும் உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்பதால், இப்படி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு கூறுகின்றது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாவின் ஹூவாய் நிறுவனத்திற்கு தடையினை விதித்தனர்.
சீனாவுக்காக உளவு பார்க்கிறது
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் வர்த்தகம் கடுமையாக சரிந்தது. அமெரிக்கா, ஹூவாய் நிறுவனம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தது. ஆனால் ஹூவாய் நிறுவனமோ அதனை மறுத்தும் வருகிறது. எனினும் இதனால் பாதிப்பு என்னவோ சீனாவுக்கு என்பது மறுப்பதற்கில்லை.
டிக்டாக் செயலி தடை
இதற்கிடையில் மற்றொரு சீனாவின் மிகப்பிரபலமான ஸ்டார்டப் நிறுவனத்தின் டிக் டாக் செயலியையும் அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தினை அமெரிக்கா நிறுவனங்கள் ஏதேனும் வாங்கினால் பார்க்கலாம். இல்லையெனில் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் கூறியது அமெரிக்கா.
ஆதாரம் இல்லை
ஆனால் சீனாவோ அல்லது அமெரிக்கா தரப்பிலோ எந்த வித ஆதாரத்தினையும் வெளியிடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே வர்த்தக ஒப்பந்தம், கொரோனாவை பரப்பியது சீனா தான், என ஒவ்வொன்றிற்கும் தொடர்ச்சியாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனினும் இது உண்மை என நிரூபிக்க இதுவரை சரியான ஆதாரத்தினை அமெரிக்காவும் காட்டவில்லை.
பங்கு விலை தட தட சரிவு
ஆனால் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் மட்டுமே இருந்து வருகின்றன. இதற்கிடையில் அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கை காரணமாக SMIC-யின் பங்கு விலையானது 19% சரிந்துள்ளது. இது அமெரிக்காவின் பிளாக் லிஸ்டில் இந்த நிறுவனம் இருக்கலாம் என்ற கூறிய பிறகு இத்தகைய சரிவினைக் கண்டுள்ளது.