ஹவுஸ்டன் : அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 50 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்ய, பிரதமர் மோடி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஒரு வாரம் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் எரிசக்தி நகரம் என்றும் அழைக்கப்படும் ஹவுஸ்டன் நகருக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் எரிசக்தி நகரம் என்ற பெயரை பெற்றுள்ள ஹவுஸ்டன் நகரம், டெக்சாஸ் மாகணத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் என்றும் கூறப்படுகிறது.
ஹவுஸ்டனில் இத்தனை நிறுவனங்கள் உண்டு
அமெரிக்காவின் எரிசக்தி நகரம் என்றும் அழைக்கப்படும் இந்த நகரத்தில் 5000 நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்காவில் மொத்தம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில், சுமார் 31 சதவிகிதம் ஹவுஸ்டன் நகரில் தான் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இங்கு நாட்டில் உள்ள மிகப்பெரிய 20 கேஸ் நிறுவனங்களில் 13 இங்கு தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் 600 உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 170 பைப் லைன் ஆப்பரேட்டர்களும் இங்கு உள்ளனர். இது தவிர 3,600 எரிசக்தி தொடர்பான நிறுவனங்களும் இங்கு உள்ளன.
அது என்ன ஒப்பந்தம்
இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனம் 7.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஷேல் கேஸ் எரிவாயுவை அனுப்ப அமெரிக்கா செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுவேயாகும். இதே போல் 28 பில்லியன் டாலர் மதிப்புள்ள, இந்தியாவில் டெல்லூரியன் நிறுவனம் அமைக்க உள்ள ட்ரிஃப்ட்வுட் எல்.என்.ஜி முனையத்தில், 18 சதவிகித பங்குகளுக்கு பெட்ரோநெட் 2.5 பில்லியன் டாலர்களை செலவிடும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 50 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்ய, பிரதமர் மோடி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பங்குதாரர்
இந்த ஒப்பந்தத்தின் படி, டெல்லூரியன் நிறுவனம் அமைக்கவுள்ள டிரிப்வுட் எல்.என்.ஜி ஏற்றுமதி முனையத்தில் இந்தியாவின் பெட்ரோநெட்2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதோடு, 40 ஆண்டு காலத்துக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை, அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இறுதி ஒப்பந்தம், அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் கையெழுத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த செயல்பாட்டுக்கு பின் இந்தியா
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அமெரிக்கா சீனாவுக்கு அடுத்தபடியாக, இயற்கை எரிவாயு உற்பத்தியில் இந்தியா திகழும் என்றும், இது தவிர இந்தியாவில் அடுத்த 2020க்குள் 10 மில்லியன் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு குழாயுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் கார்பன் உமிழ்வை 33 - 35% குறைக்க திட்டமிட்டுள்ளது. இது கடந்த 2005ல் இருந்ததை போலவே 2030-லும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு உபயோகமாக இருக்கும்
ஒரு புறம் எரிசக்தி பாதுகாப்புகாகவும், மேலும் பல முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும், இந்தியாவும் அமெரிக்காவும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் பேசப்பட்டது. இந்த விவாதம் மிக அருமையான இந்தியாவுக்கு உபயோகமான விவாதம் என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் தனது கருத்தை கூறியுள்ளார். மேலும் இந்த முதலீடுகள் இந்தியாவினை 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய ஏதுவாக அமையும் என்றும் கூறியுள்ளார்.