தலைப்பை படித்ததும் புரிந்திருக்கலாம். அமெரிக்கா ஏதோ ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது என்று. நிச்சயம் அப்படித் தான் எடுத்துள்ளது.
பொதுவாகவே அமெரிக்கா வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமின்றி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளுக்கு சிறந்த இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கான ஹெச் 1பி விசா போல, அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை வழங்கி வருகிறது.
சீனா மற்றும் இந்திய மாணவர்கள் தான் அதிகம்?
சரி கல்விக்கான விசாவைத் தானே அமெரிக்கா தடை செய்துள்ளது. இதனால் சீனா இந்தியாவுக்கு என்ன பிரச்சனை வந்து விடப்போகிறது என்று கேட்கிறீர்களா? நிச்சயம் பாதிப்பு உண்டு. ஏனெனில் அமெரிக்காவில் பயிலும் வெளி நாட்டு மாணவர்களில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களைப் பெற்று கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நாட்டு மாணவர்களும் உண்டு
இவர்களையடுத்து தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா, வியட்னாம், சவுதி அரேபியா, தாய்வான், ஜப்பான், பிரேசில், மெக்ஸிகோ, நைஜீரியா, நேபாள், ஈரான் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர். எனினும் சீனா மற்றும் இந்தியா மாணவர்கள் மட்டுமே லட்சக்கணக்கானோர் செல்கின்றனர்.
எத்தனை மாணவர்கள்
உதாரணத்திற்கு கடந்த 2018 - 19ம் ஆண்டிலேயே 3,69,548 சீனா மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றுள்ளனர். இதே காலத்தில் இந்திய மாணவர்கள் 2,02,014 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதே மற்ற நாட்டு மாணவர்களும் அமெரிக்காவில் பயின்று வந்தாலும், அவர்களின் எண்ணிக்கை எல்லாமே வெறும் 55,000 கீழ் தான் உள்ளது.
அதிரடி நடவடிக்கைகள்
தற்போது உலகம் முழுக்க கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் கோரத்தாண்டவம் ஆடி வருவதால், அந்த நாடே நிலைகுலைந்து போயுள்ளது எனலாம். சொல்லப்போனால் வல்லரசு நாடே கொரோனாவினால் ஆட்டம் கண்டுள்ளது எனலாம். இதற்கிடையில் தான் அமெரிக்கா அரசு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும் வகையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பாடம்
இதன் காரணமாக வெளி நாட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் எடுத்து வருகின்றன.
நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
இதனால் அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க குடியுரிமைத் துறை கடந்த மாதமே அறிவித்தது. இது வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமின்றி, அந்த நாட்டின் பல்கலைக் கழகங்களையும் பெரும் அதிருப்திக்கு ஆழ்த்தியது. அது மட்டும் அல்ல, இந்த விஷயத்தில் அரசின் முடிவை எதிர்த்த ஹார்வர்டு உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
திட்டம் வாபஸ்
இதற்கிடையில் பல பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு, எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும், அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களும் சற்றே நிம்மதி அடைந்தன.
புதிய மாணவர்களுக்கு தடை
ஆனால் அந்த விஷயம் அதோடு நிற்கவில்லை. தற்போது அமெரிக்காவுக்கு புதியதாக கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்த நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்த நாட்டு குடியுரிமைத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில், மார்ச் 9ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் சிஎன்என் செய்திகள் கூறுகின்றன.
இவர்களுக்கு தடை இல்லை
எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் மார்ச் 9ம் தேதிக்கு முன்னர் கல்வி விசாக்களைப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹெச்1 பி விசா தடையானது இந்த ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த கல்வி தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இதனால் அதிகம் பாதிக்கப்படபோவது சீனா தான். அடுத்து யார் இந்திய மாணவர்கள் தான்.