அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது இதுவரை இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கிடையேயான இந்த பதற்றம், உலகம் முழுவதும் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் வர்த்தக பிரச்சனையில் தொடங்கிய இந்த பிரச்சனையானது, தற்போது எதற்கெடுத்தாலும் பிரச்சனையாகவே மாறி வருகின்றது.
பாம்பும் கீரியுமாக சண்டை போட்டு வரும் இந்த இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை, எப்போது தான் முடியுமோ தெரியவில்லை.
அமெரிக்கா குற்றம்
தென் சீன கடல் விவகாரம், பிற மதத்தவர் மீதான சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகள் என ஒவ்வொன்றும் அமெரிக்க சீன உறவை மேலும் பலவீனமாக்கியது. ஆனால் தற்போது இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், கொரோனா வைரஸினை பரப்பியது சீனா தான் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது.
சீனாவின் மீதான அணுகுமுறை
அதோடு கொரோனா வைரஸினை சீன நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், அதை சீனா வேண்டுமென்றே பிற நாடுகளுக்கு பரப்பி விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தான் கொரோனா வைரஸுக்கு பிறகு சீனாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மருந்து பொருட்கள் இறக்குமதி
இந்த நிலையில் இதன் பின் சீன தூதரகத்தினை மூடல், விசா நடவடிக்கை, கல்வித் துறையில் கடும் கட்டுப்பாடு, சீனா ஆப்களுக்கு தடை என தொடர்ந்து சீனாவுக்கு பாதகமான விஷயங்களில் அதீத ஆர்வம் செலுத்தி வருகின்றது அமெரிக்கா. இந்த நிலையில் இன்று வெளியான லைவ் மின்ட் செய்தியொன்றில், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு சீனா மற்றும் பிற நாடுகளை நம்பியிருப்பதை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
சீனா தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்
அதோடு ஏற்கனவே கூறியதை போலவே தற்போதும் பெய்ஜிங் கொரோனாவை பரப்பியதால், அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய காயத்திற்காக சீனா சரியான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு டிரம்ப் மற்றும் பல நாட்டின் தலைவர்களும் கொரோனா பற்றிய செய்திகள் வெளிப்படையானதாக இல்லை என்றும் சீனாவை குற்றம் சாட்டியுள்ளனர்.
சீனா மறுப்பு
இது உலகெங்கிலும் பெரும் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆயினும் வழக்கம் போல சீனா அமெரிக்காவின் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது. மேலும் சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரப்பப்பட்டது என்பது, அமெரிக்க மக்களின் கவனத்தினை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது சீனா.
சீனா செய்தது ஒரு பயங்கரமான விஷயம்
சீனா செய்தது ஒரு பயங்கரமான விஷயம். அது திறமையற்றதாக இருந்தாலும் அல்லது நோக்கமாக இருந்தாலும் அவர்கள் செய்த ஒரு பயங்கரமான விஷயம்.. இது அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கே மிக மோசமான விஷயம் என்றும் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளார்கள் சந்திப்பில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் தயாரிப்போம்
சீனா அமெரிக்காவிற்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் செய்தது ஒரு இழிவான செயல் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளில் எங்கள் மருந்து மற்றும் மருத்துவ விநியோகச் சங்கிலிகளை வீட்டிற்கே கொண்டு வருவோம். இதற்காக நாங்கள் சீனா மற்றும் மற்ற நாடுகளை நம்புவதை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு வேலையை திரும்ப கொடுப்போம்
மேலும் பல மில்லியன்கணக்கான வேலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழில்சாலைகளை, மீண்டும் கொண்டு வருவதற்கான தனது பார்வையை அவர் முன்வைத்தார். சீனா வைரஸை நாங்கள் முறியடிப்போம். பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தினை பயன்படுத்தி இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், மிக விரைவாக தொழில் துறை அணிதிரட்டலில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆறு மாதங்களில் ஒரு உற்பத்தி அதியசத்தை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் கண்டிருக்கிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
புதிய உத்தரவில் கையொப்பம்
மேலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு அமெரிக்கர்கள், அமெரிக்க மருந்துகளை வாங்குவதை உறுதி செய்வதற்கான புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு அமெரிக்கா மக்களுக்கு அவர்களது வேலையை திரும்ப கொடுப்பது தான் தனது ஐந்தாவது உறுதிமொழி எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா நிறுவனங்களையும், தொழில் சாலைகளையும் பயன்படுத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் மக்களுக்காக செயலாற்றுவேன்
மேலும் நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் வரை அமெரிக்கா மக்களுக்காக ஆற்றலுடனும் பலத்துடனும் இறுதி வரை போராடுவேன். நான் உங்கள் குரலாக இருப்பேன். உங்களது வேலைகளை நான் பாதுகாப்பேன். இந்த தொற்று நோயில் காணப்படுவது போல, அமெரிக்கா தனக்கு தேவையான உபகரண பொருட்கள் மற்றும் மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாம் புத்திசாலிதனமாக இருக்க வேண்டும்
மேலும் சீனா மற்றும் பிற நாடுகளை நம்ப முடியாது. ஒரு நாள் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் மறுக்ககூடும். ஆக நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். உண்மையில் டிரம்பின் இந்த முடிவானது நல்ல விஷயம் என்றாலும், மருந்துகளுக்காக அதிகம் சார்ந்திருப்பது டாப் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
யார் அதிகம் இறக்குமதி?
கடந்த ஆண்டில் சீனா, இதற்கடுத்தாற்போல் இந்தியா, மெக்ஸிகோ, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் முறையே அதிகளவிலான மருந்து இறக்குமதியினை அமெரிக்காவுக்கு செய்துள்ளன.
உண்மையில் இது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் செய்யப்படுகிறதா? அல்லது சீனாவின் மீதான கோபத்தில் சொல்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால் இதனால் பாதிக்கப்படபோவது சீனா மட்டும் அல்ல, இந்தியாவும் தான். ஏனெனில் சீனாவுக்கு அடுத்தாற்போல் அமெரிக்காவுக்கு அதிக மருந்துகளை இறக்குமதி செய்வது இந்தியா தான்.