டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதில் அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் முன்னேற்றம் கண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவற்றின் மூலம் அமெரிக்காவை உளவு பார்ப்பதாகவும் கூறி பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
இதற்கிடையில் டிக்டாக் நிறுவனத்தினை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆர்வம் தெரிவித்திருந்தது. ஆனால் இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்வாங்கவே, அமெரிக்காவின் மற்றொரு ஜாம்பவான் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் ஆர்வம் தெரிவித்தது.
விரைவில் ஒப்பந்தம் வரலாம்
சொல்லப்போனால் இந்த இரு நிறுவனங்கள் இடைய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இது பற்றிய முடிவு எட்டப்படும் என டிரம்ப் தெரிவித்தார். அதோடு டிக்டாக் - ஆரக்கிள் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் டிக்டாக்கின் நம்பத்தகுந்த கூட்டு நிறுவனமாக ஆரக்கிள் மாறும் என்றும் கூறப்படுகிறது. .
முதலீடுகள் அதிகரிக்கும்
எனினும் இதுவரையில் இது பற்றிய ஒப்பந்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், டிக்டாக்கின் சர்வதேச வியாபார பிரிவு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆரக்கிள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
கையெழுத்திட தயாராக இல்லை
இதற்கிடையில் இதுபற்றி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தம் பற்றிய அறிக்கை இன்று வரலாம். நான் எதையும் கையொப்பமிடத் தயாராக இல்லை. அந்த ஒப்பந்தத்தினை நான் காண வேண்டும் என்றும் புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதோடு சிலர் இந்த ஒப்பந்தத்தினால், டிக்டாக் 100 மில்லியன் பயனர்களின் தகவல்களை பராமரிக்கும் என்றும் அஞ்சுகின்றனர். இந்த ஒப்பந்தம் குறித்த கவலையையும் எழுப்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு 100% வேண்டும்
அதோடு தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரையில் 100% ஆக இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆரம்பத்தில் டிக்டாக் அமெரிக்கர்களின் தரவை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் டிக் டாக் நிறுவனமோ அமெரிக்க பயனர்களின் தரவை சீன அரசாங்கத்துடன் பகிரவில்லை என்றும் கூறியது.
ஆரக்கிள் மதிப்பாய்வு செய்யும்
இதற்கிடையில் ஆரக்கிள் டிக் டாக் பேச்சு வார்த்தையில், அமெரிக்கர்களின் தரவினை, டிக் டாக் நிறுவனம் ஆரக்கிள் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இது அமெரிக்க ஆரக்கிளில் டிக் டாக்கிற்கான தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான குறியீட்டை உருவாக்காது. ஆனால் அதனை மதிப்பாய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.
டிக் டாக்கினை தடை செய்ய வேண்டும்
ஆனால் ஆரக்கிள் - டிக்டாக் ஒப்பந்தத்தினை குடியரசுக் கட்சி ஏற்க மறுக்கிறது. டிக் டாக் செயலியின் முழு உரிமையும் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றால் தான் அமெரிக்காவில் அந்த செயலி அனுமதிக்கப்படும் என்பதில் டிரம்ப் அரசு உறுதியாக உள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவின் மிசோரி மாகாண குடியரசு கட்சி செனேட்டர் ஜாஷ் ஹவுலே அமெரிக்கா நிதி அமைச்சக செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆரக்கிள் உடன் இணைந்து பைட் டான்ஸ் நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆக இத்தடனை இடர்பாடுகளையும் தாண்டி டிக்டாக் அமெரிக்காவில் மீண்டும் வலம் வருமா? ஆரக்கிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படுமா? காத்திருந்து தான் பார்ப்போமே.