உலகின் மிகப் பெரிய சக்தி மையங்களை பட்டியல் போட்டால், அதில் அமெரிக்க அதிபர் பதவிக்கும் நிச்சயம் ஒரு முக்கிய இடம் உண்டு.
உலகின் பல நாட்டு வரலாற்றில், அமெரிக்காவுக்கு என்று ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கலாம். அந்த அளவுக்கு அமெரிக்கா, பல நாடுகளுடன் வர்த்தக உறவோ, அரசியல் உறவோ வைத்திருக்கும் அல்லது ஆக்கிரமிப்புகளைச் செய்து இருக்கும்.
அப்படிப்பட்ட, சர்வ வல்லமை பொருந்திய இடத்தில் தான், கடந்த நான்கு ஆண்டுகளாக டொனால்ட் ட்ரம்ப் அமர்ந்து இருக்கிறார்.
அதிபர் ட்ரம்ப்
கிட்டத்தட்ட அமெரிக்க சரித்திரத்தில், ஒரு அதிபர், அதிகம் சூடு கிளப்பும் வார்த்தைகளை பயன்படுத்தி, மற்ற நாடுகளை தாக்கிப் பேசுபவர்கள் பட்டியலைப் போட்டால், அதில் டொனால்ட் ட்ரம்புக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு சமூக நாகரீகம் கூடப் பார்க்காமல், தன் மனதில் பட்ட படி மற்ற நாடுகளை மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சிப்பவரும் ட்ரம்ப் தான்.
சமீபத்தைய உதாரணம்
"டிரேட் டீலில் சொன்ன படி நடந்து கொள்ளவில்லை என்றால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்துவிடுவேன்"
"சீனா உடனான உறவை முழுமையாக முறித்துக் கொள்வேன். அதனால் அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும்" என அதிரடி அரசியல் குண்டுகளை வீசிய போதே அவைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
சொதப்பல்
சரி வங்கிக் கணக்கு விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் அந்த சர்வ வல்லமை பொருந்திய, அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்பின் வங்கிக் கணக்கு விவரங்களையே கவனம் இல்லாமல், பத்திரிகையாளர்களுக்கு காட்டி விட்டது, அமெரிக்காவின் பத்திரிகை தொடர்பு அமைச்சகம். இப்போது சமூக வலைதளத்தில், டிரெண்டிங் ஆகிக் கொண்டு இருக்கிறது.
எப்படி வெளி வந்தது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் சம்பளத்தில் ஒரு பகுதியாக 1,00,000 டாலரை, அமெரிக்காவின் சுகாதார துறைக்கு நன்கொடை கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது தொடர்பாக பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு பேசும் போது, ட்ரம்ப் கையெழுத்து போட்ட உண்மையான காசோலையை (செக்) பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காட்டி இருக்கிறது பத்திரிகை அமைச்சகம்.
போலி தான் வழக்கமாம்
பொதுவாக, இப்படி பெரிய தலைவர்கள், தங்கள் சொந்த பணத்தில், ஏதாவது நன்கொடைகளைச் செய்யும் போது, அவர்களின் முக்கிய விவரங்கள் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு போலி காசோலையைத் தான் காட்டுவார்களாம். ஆனால் இந்த முறை, அவர்களுக்கே தெரியாமல், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சொந்த வங்கிக் கணக்கு விவரங்களுடன் இருக்கும், அவர் கையெழுத்து போட்ட செக்கையே பொது வெளியில் காட்டி விட்டார்கள்.