கொரோனா வைரஸ் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அவ்வப்போது ரேம்டிசிவர் போன்ற மருந்துகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள் என நல்ல செய்தி வந்தாலும், நோய் தொற்று பரவுவதும், இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை.
இந்த கொடூர வைரசால் மனித உயிர்கள் இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளோடு, தற்போது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களும் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் போலிருக்கிறது.
அமெரிக்க
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் ஏன் தவிக்க வேண்டும்? கொரோனா எப்படி அமெரிக்க செல்ல இருக்கும் இந்தியர்களை பாதிக்கிறது? ஒட்டு மொத்தத்தில் என்ன பிரச்சனை என்பதை விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், அமெரிக்க பொருளாதார சரிவுகளைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.
நஷ்டம்
உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக மார்தட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா, இந்தக் கொரோனா வைரஸால், உலகில் எந்த நாடும் பாதிக்கப்படாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று அதிகமாகவும், கொரோனாவால் உயிர் இழப்போர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும் நாடு அமெரிக்கா தான்.
பொருளாதாரம்
அமெரிக்காவில், கொரோனா வைரஸால், மனித உயிர்கள் பறி போவதோடு மட்டும் நிற்காமல், அமெரிக்க பொருளாதாரத்தையும் விரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 33 மில்லியன் பேர் (3.3 கோடி பேர்) தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரிவு
சர்வதேச பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கணக்குப் படி அடுத்தடுத்த காலாண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியை காணலாம் என கணித்து இருக்கிறார்கள். அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூட, அமெரிக்க பொருளாதாரம் அடுத்தடுத்த காளாண்டுகளில் வீழ்ச்சி காண வாய்ப்பு இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
முன் எச்சரிக்கை
இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் அமெரிக்கா தன்னை பாதுகாத்துக் கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தான், அமெரிக்க கனவு காணும் இந்தியர்களை பாதிக்க இருக்கிறது. அந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் முதல் பகுதியை கடந்த மாதமே செய்துவிட்டார்கள்.
குடியேற்றத் தடை (Immigration ban)
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் செயல் ஆணை (Executive Order) வழியாக, 60 நாட்களுக்கு, அமெரிக்காவில் மற்ற நாட்டுக்காரர்கள் குடியேற, தற்காலிக தடை விதித்து இருந்தார். அமெரிக்க அதிபரின் இந்த தற்காலிக தடை, அமெரிக்க குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவி விடக் கூடாது, அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் குறைய வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம்.
வெர்ஷன் 2.0
இப்போது மேலே சொன்ன அமெரிக்க அதிபரின் குடியேற்றம் தொடர்பான செயல் ஆணையை தொடர்ந்து, இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது அமெரிக்கா. இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா, மற்ற நாட்டு மக்களுக்கு வழங்கும் வேலை மற்றும் கல்வி சார் விசாக்களுக்கு கூட, தற்காலிக தடை விதிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
இந்தத் தற்காலிக தடை, ஒரு சில விசா கேட்டகிரிகளில் முழுமையாக கொண்டு வரருவது தொடங்கி, அமெரிக்க மக்களை வேலையில் எடுப்பதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது வரை பல யோசனைகள் இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பு அதிகாரிகளில் இருந்து சிலர் வாய் திறந்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆக விசா மீது தற்காலிக தடை விதிக்க வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
செனட் கடிதம்
அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்த நான்கு செனட் உறுப்பினர்கள், அதிபர் டிரம்ப்-க்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு புதிதாக வந்து வேலை செய்ய இருக்கும் அனைத்து ஊழியர்களின் விசாக்களையும் (New Guest Workers Visa) அடுத்த 60 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.
கோரிக்கை
அதோடு H-1B விசா உட்பட மற்ற சில வேலை சார்ந்த விசாக்களை, அடுத்த ஓராண்டு காலத்திற்கு அல்லது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகள் மேம்படும் வரையிலோ, விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு, தங்கள் கடிதம் வழியாக கோரிக்கை வைத்து இருக்கிறார்கள், ரிபப்ளிகன் செனட் உறுப்பினர்கள்.
இந்தியர்களுக்கு சிக்கல்
இப்போது கொரோனா காலத்திலும் அமெரிக்க கனவோடு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு, இந்த தற்காலிக விசா தடையால், அமெரிக்கா செல்ல முடியாமல் தவிப்பார்கள், தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு H-1B விசா என்றாலே இந்தியர்கள் தான். இந்த லட்சணத்தில் H-1B உட்பட பல கல்வி மற்றும் வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்தியர்கள் தவிக்கத் தானே செய்வார்கள்..? எப்பா கொரோனா.. உன்னால நாங்க இவ்வளவு சிரமப்படனுமா..?