வாஷிங்டன்:அமெரிக்காவின் கடன் வரம்பானது 31.4 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசு கட்சியினருக்கும் இடையே வலுவான போட்டியானது இருந்து வருகின்றது. இதற்கிடையில் இவ்விரு கட்சியினருக்கும் இடையிலான கடன் உச்ச வரம்பை உயர்த்துவதில் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், இது சில மாதங்களில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இது குறித்து கருவூலத் துறை செயலர் ஜெனட் யெலன், அமெரிக்க அதன் கடமைளை தவறவிடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடன் அதிகரிக்கலாமோ?
உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் இப்படி ஓரு சர்ச்சை கிளம்பியிருப்பது, உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது எனலாம். இன்று நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரெசசனுக்குள் நுழையலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கொண்டு மேற்கத்திய நாடுகளின் கடன் விகிதம் அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
கடன் உச்ச வரம்பு
சமீபத்திய தசாப்தங்களாகவே அமெரிக்காவின் கடன் வளர்ச்சியானது அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கடன் உச்ச வரம்பினை உயர்த்துவதில் கருத்து வேறுபாடும் பல வருடங்களாகவே இருந்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமையன்று அதன் கடன் வரம்பை எட்டியது. இது தற்போது 31.4 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஆபத்தான கடன் விகிதம்
இந்த கடன் விகிதம் என்பது ஆபத்தானது என்பதை மறுப்பதற்கில்லை. 31 ட்ரில்லியன் டாலர் என்பது கண்ணை கவரும் விகிதமல்ல. கொரோனாவின் வருகைக்கு பிறகு அமெரிக்காவின் கடன் விகிதமாந்து பெரியளவில் அதிகரித்து. இது ஜிடிபி-யில் 120% ஆகும். இது வரலாறு காணாத அளவுக்கு உச்சமாகும். இரண்டாம் உலகபோருக்கு பிறகு மிக அதிகம். கொரோனாவின் காலகட்டத்தில் அரசின் செலவினங்கள் உச்சத்தினை எட்டின. அதேசமயம் வருவாய் ஆனது சரிவினைக் கண்டது. இந்த கடன் விகிதம் பெரும் விவாதத்திற்குரியது.
கவனம் செலுத்தலாம்
கடன் உச்சவரம்பை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்த உடன் பாட்டிற்கு காங்கிரஸூக்கும், ஜனாதிபதி ஜோ பைடனும் ஒரு முடிவுக்கு வர ஜூன் மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்படலாம் என தெரிகிறது.
மொத்தத்தில் 2023ம் ஆண்டு என்பது கடன் மற்றும் செலவினங்களில் கவனம் செலுத்தும் ஒரு ஆண்டாக இருக்கும் எனலாம்.
பணவீக்கம்
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல்வேறு நாடுகளும் பணவீக்கதினால் தவித்து வருகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து வட்டி விகிதத்தினை மத்திய வங்கிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் அரசின் கடனும் மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டுள்ளது மேற்கொண்டு, அமெரிக்க அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளும் சரியலாம்
இது ஒரு புறம் எனில், மறுபுறம் அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி உலக நாடுகளையும் வீழ்ச்சிக்கு கொண்டு செல்லலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் உலக நாடுகள் பலவும் பிரச்சனையை எதிர்கொள்ளலாமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இப்பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறது பைடன் அரசு.. பொறுத்திருந்து தான் பார்ப்போமே.