ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளக்கும் வோக்ஸ்வாகன் உலகின் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து முழுமையாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மாற முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் வோக்ஸ்வாகன் ஐரோப்பியச் சந்தை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் நிலையில், மிகப்பெரிய எலக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வோக்ஸ்வாகன் அதிரடி முடிவு
ஐரோப்பிய சந்தையின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வோக்ஸ்வாகன் கீழ் பல சூப்பர் கார் நிறுவனங்களும் இருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவுகளும் மொத்த ஆட்டோமொபைல் துறையைப் புரட்டிப்போடக் கூடியதாக இருக்கும் என்றால் மிகையில்லை.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்குப் பெயர்போன வோக்ஸ்வாகன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், இந்தக் கார்களுக்கு முதலும் முக்கியத் தேவையாக இருக்கும் பேட்டரியை வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்தோ, 3ஆம் தரப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்க விரும்பவில்லை.
பேட்டரி தொழிற்சாலை
இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தைப் போலவே வோக்ஸ்வாகன் மற்றும் அதன் துணை ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான பேட்டரி தேவையைப் பூர்த்தி செய்யவும் வகையில் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் அறிவிப்பு ஐரோப்பியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2030 இலக்கு
2030ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் மட்டும் 6 பேட்டரி தொழிற்சாலை உருவாக்கவும், ஐரோப்பா முழுவதும் எலக்ட்ரிக் கார் பயன்படுத்துவதற்காக எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்காக மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாக வோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது.
வோக்ஸ்வாகன் பங்கு மதிப்பு
இதன் வாயிலாகச் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் வோக்ஸ்வாகன் நிறுவனப் பங்குகள் சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்கள் குஷிப்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்திலும் இதன் தாக்கம் குறையாமல் வர்த்தகம் துவங்கி 3 மணிநேரத்தில் தொடர் உயர்வில் 6.64 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பேட்டரி விலையை 50% குறைப்பு
மேலும் வோக்ஸ்வாகன் பேட்டரி தொழிற்சாலையில் செல் வடிவம், உற்பத்தி முறை, மூலப்பொருள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் பேட்டரி விலையை 50 சதவீதம் குறைக்க முடியும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது சந்தையில் இந்நிறுவனம் விற்பனை செய்யும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையான விலையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.