1950-களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. இரண்டுமே, வளரும் நாடுகள் தான்.
அதிக மக்கள் தொகை கொண்ட, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியாத நாடுகள்.
வேலை வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தால் மாரியாத்தா மகிமை. இல்லை என்றால் கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைக்க வேண்டியது தான். ஆனால் சீனா தன்னை ஒரு கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்டாக மாற்றிக் கொண்டது.
1979-ல் அமெரிக்க பயணம்
அதென்ன கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட்? சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இன்று வரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தான் சீனாவில் எல்லாமே. அவர்கள் சொல்வதை மறுப்பதற்கோ, மறிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தேசத்தின் உச்சபட்ச தலைவர் (அப்போது அதிபர் பதவி கிடையாது என்கிறது விக்கிபீடியா) 1979-ல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கோண்டார். அவர் பெயர் டெங் சவ்பிங் (Deng Xiaoping).
முதல் முறை
அவ்வளவு ஏன், ஒரு சீன தலைவர், அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது அதுவே முதல் முறையாம். அப்போது தான் சீனா, தன் சீனப் பெருஞ்சுவரைத் தாண்டி உலகத்தையும், முதலாளித்துவத்தையும், முதலாளித்துவத்தினால் கிடைக்கும் பணத்தையும் பார்த்தது. மெல்ல மேற்கத்திய நாடுகளுக்கு சீன பெருஞ்சுவரின் கதவுகளைத் திறந்தது.
சிறப்புப் பொருளாதாரம் மண்டலங்கள்
அந்த காலகட்டத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை சீனா ஈர்க்கத் தொடங்கியது. அதோடு SEZ மண்டலங்களையும் அறிவித்து தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், வியாபாரங்கள் என தன் பொருளாதாரத்தை கவனிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பங்குச் சந்தைகளை எல்லாம் திறந்து தன்னை ஒரு தினுசான கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் நாடாக மாற்றிக் கொண்டது.
விளைவு என்ன
சீனாவின் கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் முயற்சி பிரம்மாண்ட பலன்களைக் கொடுத்தது. 1960-ல் வெறும் 59 பில்லியன் டாலராக இருந்தது சீனாவின் ஜிடிபி. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜிடிபியோ 543 பில்லியன் டாலர். சீனாவை விட அமெரிக்கா சுமாராக 10 மடங்கு பெரிய பொருளாதாரம். ஆனால் இன்று சீனாவின் ஜிடிபி சுமாராக 13 ட்ரில்லியன் டாலருக்கு வளர்ந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜிடிபி சுமார் 21 ட்ரில்லியன் டாலராக வளர்ந்து இருக்கிறது. சீனாவை விட 1 மடங்கு கூட அமெரிக்கா பெரிய பொருளாதாரம் இல்லை.
முந்திவிடுவான்
2025-ல் சீனா பொருளாதாரம், ஜிடிபி அடிப்படையில் உலகின் நம்பர் 1 பொருளாதாரமாக வலம் வரலாம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். சீனாவும் அதற்கு சளைக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவை முந்த நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
வெளியேறும் கம்பெனிகள்
அப்படி என்றால் சீனாவின் அசுரத் தனமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் எப்படி இருந்து இருக்கும் எனப் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட, சீனாவை அம்போ என விட்டுவிட்டுத் தான், இன்று பல கம்பெனிகள், தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ள துடித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏன் சீனா வேண்டாம்
சீனா உலகத்தின் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல கம்பெனிகளின் அத்தியாவசியப் பொருட்கள், சீனாவில் இருந்து வந்தால் தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும் என்கிற ரீதியில், சீனாவின் சப்ளை செயின் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக சென்னையில் இருக்கும் டிவிஎஸ் கம்பெனி கூட கடந்த பிப்ரவரியிலேயே தன் உற்பத்தி 10% குறையும், காரணம் சீனாவில் இருந்து வர வேண்டிய சரக்குகள் வரவில்லை என்றார்கள்.
அதிகம் நம்ப வேண்டாம்
ஆக, கம்பெனிகள் ஒரே நாட்டை, தங்கள் வியாபாரத்துக்கு அதிகம் நம்ப வேண்டாம் என்கிற நோக்கில், சீனாவில் இருந்து வெளியேற விரும்புகிறார்களாம். அதோடு கொரோனா பரவல், மற்ற உலக நாடுகளோடு இருக்கும் உறவுகள், அமெரிக்கா சீனாவுக்கு இடையில் இருக்கும் அனையாத வர்த்தகப் போர் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகிறார்களாம். வெளியேறுவது சரி... அதன் பின் எந்த நாட்டுக்குப் போகிறார்கள்..?
எந்த நாட்டுக்கு மாற்றுகிறார்கள்
நோமுரா என்கிற ஜப்பான் கம்பெனியின் கணக்குப் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், சீனாவில் இருந்து சுமாராக 56 கம்பெனிகள் வெளியேறினார்களாம். அதில் 26 கம்பெனிகள் யாரும் எதிர்பார்க்காத வியட்நாமில் கடை விரித்து இருக்கிறார்களாம். தைவானில் 11 கம்பெனிகளும், தாய்லாந்தில் 08 கம்பெனிகளும், இந்தியாவில் வெறும் 03 கம்பெனிகள் மட்டுமே தங்கள் ஆலைகளைத் தொடங்கி இருக்கிறார்களாம்.
ஏன் வியட்நாமில்
2018 - 19 நிதி ஆண்டில் தானே போனார்கள். இப்போதும் கம்பெனிகள் வியட்நாமில் ஆர்வம் காட்டுகிறார்களா என்ன..? என கேள்வி கேட்டால் "ஆம்" என்கிறது க்விமா (Qima) என்கிற சப்ளை செயின் ஆய்வுக் கம்பெனி. தற்போது கம்பெனிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடுகிறார்களாம். குறிப்பாக கொரோனாவை சிறப்பாக சமாளித்த நாடுகளை கவனிக்கிறார்களாம்.
வியட்நாமில் என்ன வியப்பு
ஒட்டு மொத்த வியட்நாமில் சுமாராக 10 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். அந்த நாட்டில் இதுவரை 350-க்கும் குறைவான மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதே போல ஒருவர் கூட வியட்நாமில் கொரோனாவால் உயிரிழக்கவில்லையாம். இந்த ஒரு காரணமே கம்பெனிகளை சுண்டி இழுக்கிறதாம்.
வியட்நாமுக்கு வரவேற்பு இருக்கா?
ஐரோப்பிய யூனியனுக்கு, வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 85 % குறைத்து இருக்கிறார்களாம். அதே போல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, வியட்நாமுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விஷயங்களையும் தளர்த்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதை விட என்ன பெரிய வரவேற்பு வேண்டும்?
நோ இந்தியா
கொரோனா வைரஸை இந்தியா சரியாக கையாளவில்லை என்பதைத் தான், கம்பெனிகள் இந்தியாவுக்கு வராத முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது. இந்தியா மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாடாக இருந்தும், லட்சக் கணக்கான ஏக்கர் தொழிற்சாலை நிலங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக அரசே சொல்லியும், இந்தியாவால், சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியாவுக்குள் அழைத்து வர முடியவில்லை. தம்மா துண்டு நாடு வியட்நாமோ கொரோனாவை சூப்பராக சமாளித்து கம்பெனிகளை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.
முயற்சி வீண்
லட்சக் கணக்கான ஏக்கர் தொழிற்சாலை நிலங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக இந்திய அரசே சொல்லியும், கம்பெனிகளுக்கு சாதகமான பல சலுகைகளுக் கொடுக்கின்ற போதிலும், இந்தியாவால், சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியாவுக்குள் அழைத்து வர முடியவில்லை. தம்மா துண்டு நாடு வியட்நாமோ கொரோனாவை சூப்பராக சமாளித்து கம்பெனிகளை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.