இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர் மார்க் ஜக்கர்பெர்க். கிட்டதட்ட 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட மார்க் ஜக்கர்பர்க் திடீரென மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஹவாய் தீவில் உள்ள தனது பிரம்மாண்ட பண்ணையில் மாடுகளை வளர்த்து வரும் மார்க், மெட்டா நிறுவன பணிகளால் ஏற்படும் மனசிக்கல்களில் இருந்து திசை திருப்ப முற்றிலும் மாறுபட்ட இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். Idea Generation என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மார்க் தன்னுடைய மாடு வளர்ப்பு திட்டம் குறித்து பகிர்ந்துள்ளார்.

உலகின் மிக உயர்தர மாட்டிறைச்சியை உருவாக்குவதே தன்னுடைய மாடு வளர்ப்பின் நோக்கம் என கூறியுள்ளார். இதில் பெரிய அளவிலான வணிக நோக்கம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். மாடுகளின் மரபணுக்கள், அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் தரமான இறைச்சியை உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் மீதான தனது ஆர்வத்தினால் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது மெட்டா போன்ற ஒரு பெரிய பிஸ்னஸாக இதனை மாற்றும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார். பொழுதுபோக்குக்காக இதனை செய்வதாக விளக்கம் தந்துள்ளார். இருந்தாலும் பெரு முதலாளிகள் எதை செய்தாலும் அதில் ஒரு வணிக நோக்கம் இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட இந்த பண்ணையில் உலகிலேயே மிகவும் பிரீமியம் மற்றும் தரமான மாட்டிறைச்சி ரகங்களாக கருதப்படும் வேகியு (Wagyu) மற்றும் அங்கஸ் (Angus) ஆகிய இரண்டு வகையான மாடுகளை இவர் வளர்க்கிறார். இந்த மாடுகளுக்கு அவர் மக்காடமியா நட்ஸ்களை தீவனமாக வழங்குகிறார். இதற்காக தன்னுடைய பண்ணையின் ஒரு பகுதியில் மக்காடமியா மரங்களை வளர்க்கிறார்.
சத்துக்கள் நிறைந்த இந்த நட்ஸ்கள் நன்றாக வறுக்கப்பட்டு, மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இது மாடுகளுக்கு அதிகப்படியான கலோரிகளை வழங்கி, அவற்றின் உடல் எடையை சீராக அதிகரிக்க உதவுகிறதாம். அதுமட்டுமில்லாமல் மாடுகளுக்கு குடிக்க பீர் வழங்கப்படுகிறதாம்.மாடுகளுக்காக பிரத்யேகமாக பீர் காய்ச்சி வழங்குகிறார்களாம்.
மார்க் ஜக்கர்பெர்க்கின் இந்த ஹவாய் பண்ணை மிகவும் பிரம்மாண்டமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவாயின் கவுவாய் தீவில் பல ஆண்டுகளாக நிலங்களை வாங்கி அவர் இந்த பண்ணையை உருவாக்கியுள்ளார். இதன் மதிப்பு தோராயமாக 300 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்த பண்ணைக்குள் இரண்டு பெரிய மாளிகைகள், விருந்தினர் தங்குமிடம், உடற்பயிற்சிக் கூடம் , டென்னிஸ் மைதானம் மற்றும் சுரங்கப்பாதை போன்ற வசதிகள் உள்ளன.
டெக் துறையில் தீவிரமாக இயங்கும் தனக்கு அதில் இருந்து பிரேக் வேண்டும் என்பதற்காகவே மாடு வளர்ப்பை தேர்வு செய்வதாக கூறும் மார்க், தன்னுடைய குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம் வந்திருப்பதாக தெரிவிக்கிறார். இருந்தாலும் மாடுகளுக்கு பீர் உணவாக கொடுக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

