ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், அடுத்த கட்ட பொருளாதார தடையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய ஐரோப்பிய ஆணையத் தலைவர், 6 மாதத்திற்குள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என கூறியிருந்தார்.
இதற்கிடையில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரியலாம்
இதற்கிடையில் தான் இன்று கச்சா எண்ணெய் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடான சீனாவில், தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலை காரணமாக, அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன லாக்டவுன்
சீனாவின் தற்போதைய லாக்டவுன் நடவடிக்கையானது தொடர்ந்து எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் சவுதி அரேபியாவின் விலை குறைப்பு நடவடிக்கையானது விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சவுதி விலை குறைப்பு
உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஜூன் மாதத்திற்காக ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்காக எண்ணெய் விலையினை குறைத்துள்ளது. இது சர்வதேச அளவில் தேவை குறைந்து வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.
தடைக்கே தடையா?
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டு வரும் நிலையில், பல்கேரியாவின் துணை பிரதமர் தங்கள் நாடு இந்த தடையை ஆதரிக்காது என்றும் கூறியிருந்தார். இது ஐரோப்பிய நாடுகள் தடை நடவடிக்கைக்கு நெருக்கத்தில் இருக்கும் நிலையில் வந்துள்ளது. இதற்கிடையில் இது குறித்தான பேச்சு வார்த்தையானது நாளை மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இது குறித்து சுமூக முடிவு எட்டப்படுமா? கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வருமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.