வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6 சதவிகிதமாகவே இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த வங்கி தனது சமீபத்திய பதிப்பான தெற்காசிய பொருளாதார மையத்தில் 2021ம் ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் என்றும், இதே 2022ல் 7.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கணித்துள்ளது.
இது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் இந்த வளர்ச்சி விகிதமானது 6.9 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடப்பதக்கது. இதுவே 2017 - 2018ம் நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி எனினும் உற்பத்தி மற்றும் கட்டுமான நடவடிக்கைகளில் அதிகரிப்பு காரணமாக, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே வேளாண்மை மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி முறையே 2.9 மற்றும் 7.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு பரந்து விரிந்த அளவு வீழ்ச்சியை கண்டது. அதிலும் குறிப்பாக தேவை என்பது கடுமையான வீழ்ச்சியை கண்டது. குறிப்பாக தனியார் நுகர்வு மிக கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் தொழில்துறை மற்றும் சேவை துறையில் மிக பலவீனமடைந்துள்ளது என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே பணவீக்க விகிதமானது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 3.4 சதவிகிதமாக இருந்தது. இதே 2019 - 2020 முதல் பாதியில் ரிசர்வ் வங்கியின் இலக்கு 4 சதவிகிதத்தை விடவும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 2019 முதல், ரிசர்வ் வங்கி இது வரை 135 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் பணப்புழக்கத்தினை அதிகரிக்க முடியும் என்றும், இதனால் தேவை அதிகரிக்கும் என்றும், இது உற்பத்தி துறையில் வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எனப் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துள்ளதாக ஏற்கனவே பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வரும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கியும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.