நியூயார்க்: யாஹூ நிறுவன சிஇஓ மரிஸ்ஸா மேயர் தனது வேலையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் 1,500 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளார்.
யாஹூ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகேவ சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் யாஹூ நிறுவனம் தனது ஊழியர்களில் 1,500 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது . யாஹூ சிஇஓ மரிஸ்ஸா மேயரை பணிநீக்கம் செய்யுமாறு பங்குதாரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 1,500 பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு யாஹூ நிறுவனத்தின் வருவாய் வெகுவாக குறைந்துள்ள நிலையில் ஆண்டுக்கு 400 மில்லியன் டாலரை சேமிக்க தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
மேலும் யாஹூவின் காப்புரிமைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சிலவற்றை 1 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை விற்க திட்டமிட்டுள்ளார் மேயர். யாஹூ கேம்ஸ், யாஹூ டிவி, மேயர் சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகு துவங்கப்பட்ட டிஜிட்டல் பத்திரிக்கைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளன.
யாஹூ நிறுவனத்தை சிறியதாக்கி சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார் மேயர். தானும், மேயரும் கம்பெனி விவகாரத்தில் சில தவறுகள் செய்துவிட்டதாகவும், அதை திருத்த முயற்சிப்பதாகவும் யாஹூ நிறுவன தலைமை நிதி அதிகாரி கென் கோல்டுமேன் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய மேயர் கடந்த 2012ம் ஆண்டு யாஹூ சிஇஓவாக நியமிக்கப்பட்டார். அவர் யாஹூ நிறுவனத்தை தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல தான் பாடுபட்டு வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
தான் வந்த பிறகு யாஹூ நிறுவனம் வலுவடைந்துள்ளதாக மேயர் மேலும் தெரிவித்துள்ளார். துபாய், ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ, பியூனஸ் ஏர்ஸ், அர்ஜென்டினா, மேட்ரிட் மற்றும் மிலனில் உள்ள அலுவலகங்களுக்கு மூடுவிழா நடத்த உள்ளார் மேயர்.
மேயர் 3 பில்லியன் டாலர் செலவு செய்து 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கியும் யாஹூவின் வருவாய் மட்டும் குறைந்து கொண்டே தான் போகிறது. அவர் பலரை வேலைக்கு எடுத்து புதிய மொபைல் அப்ளிகேஷன்களை எல்லாம் உருவாக்கியும் ஒன்றும் நடக்கவில்லை.