அமெரிக்கா ஈரான் மற்றும் வட கொரியா நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ZTE முறைகேடாக அந்த இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் ZTE நிறுவனம் அதனை ஒப்புக்கொண்டு அமெரிக்க அரசு விதித்த பில்லியன் டாலர் அபராத தொகையினைச் செலுத்த ஒப்புக்கொண்டது.
அபராதம்
ZTE நிறுவனம் அமெரிக்க அரசு விதித்த 1.19 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்ட போதிலும் அடுத்தக் கட்ட நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.
மிகப் பெரிய சிக்கலில் ZTE
அமெரிக்க அரசு உடனான ஒப்பந்தத்தினை மீறியுள்ள நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு ZTE நிறுவனத்திற்கு 7 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மூடப்படும் நிலை
இதனால் மிகப் பெரிய சிக்கலில் ZTE நிறுவனம் சிக்கியுள்ள நிலையில் டிரம்ப் அரசு எடுத்து இருக்கும் இந்த முடிவானது மொத்தமாக மூட வைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள்
தற்போது ZTE நிறுவனத்தில் தோராயமாக 75,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது நிலை என்ன ஆகும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ZTE 20 பில்லியன் டாலர் மதிப்பினை கொண்டு மிகப் பெரிய நிறுவனமாக இந்தத் தடைக்கு முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்
இதற்கிடையில் மே 13-ம் தேதி அந்த நிறுவனத்தின் மீது கருணை காட்ட டிரம்ப் முன்வந்த போதிலும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது உள்ள சூழலை பார்க்கும் போது ZTE நிறுவனத்தினால் அமெரிக்காவில் வர்த்தகத்தினைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தை
ZTE நிறுவனத்தின் இந்த நிலை குறித்துச் சீன அரசு மற்றும் அமெரிக்க அரசு இரண்டும் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில் சர்வதேச வர்த்தகத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் என்ன முடிவாகும் என்பது குழப்பத்தில் தான் உள்ளது. அதே நேரம் டிரம்ப் ZTE-க்கு அதரவாக எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கிம் ஜோங் அன் - டிரம்ப்
மறுபக்கம் சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் அன் உடன் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அதில் ZTE நிறுவனம் குறித்துச் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.