சென்னை: உலகம் உங்கள் கை விரல்களில், அப்படின்னு சொல்ற காலம் போய் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் உள்ளங்கைகளுக்குள் அடங்கும் நிலையில் இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதில் நிதி மேலாண்மை என்ன விதிவிலக்கா..?. அய்யோ நிதி மேலாண்மையா என்று பதறி அடித்துக்கொண்டு அடுத்தச் செய்திக்கு போய்விட வேண்டாம்.
இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உங்களின் நிதி மேலாண்மை பணிகளையும் உங்களின் ஸ்மார்ட்போன் மூலம் மிகவும் ஸ்மார்டாகச் செய்ய முடியும்.
மொபைல் பேங்கிங்
இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் மொபைல் பேங்கிங் அல்லது மொபைல் வங்கிச் சேவையை வழங்குகின்றன. அதாவது உங்கள் வங்கிக்குண்டான செயலியை (ஆப்) உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உங்கள் கணக்குகளை முழுமையாக நிர்வகிக்க முடியும்.
மக்களும்.. மொபைல் சேவைகளும்..
இன்றளவில் மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இதன் மூலம் வங்கிச் சேவைகளைப் பெறுவது சவுகரியமாகவும் எளிதாகவும் உள்ளது.
இந்நிலையில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் பேங்கிங் சேவையைப் பெறலாம். இது பலரின் வங்கி செயல்பாடுகளை எளிமையாக்க முடியும்.
நீங்கள் ஏற்கனவே மொபைல் வங்கி சேவையைப் பயன்படுத்தி வந்தால் உங்கள் அன்புக்குரிய நண்பர்களுக்குப் பயன்படும் வகையில் இக்கட்டுரையை ஷேர் செய்யுங்கள்.
பதிவுசெய்தல்
சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்க விண்ணப்பப் படிவங்களை வைத்துள்ளன. அதை நிரப்பி உங்களுடைய அடையாளச் சான்றை வைத்து வங்கிகளில் சமர்ப்பிக்கலாம்.
மொபைல் பேங்கிங் செயலி (ஆப்)
வாடிக்கையாளர்கள் கூகிள் பிளே, ஆப் ஸ்டோர் என்ற ஆப் ஸ்டோர்களில் உங்கள் வங்கிக்கான செயலியை உங்களது மொபைல் போனின் மாடலுக்கு ஏற்ப பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆக்டிவேஷன் அல்லது செயற்படுத்துதல்
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்த பின்பு சில எளிய வழிமுறைகள் மூலம் ஆக்டிவேட் செய்யமுடியும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங் பின் எனப்படும் ரகசியக் குறியீட்டு எண்ணை குறுந்தகவல் மூலமாக அனுப்பிப் பதிவுசெய்துகொள்ள அனுமதிக்கின்றன.
வங்கி செயலியை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இந்த ரகசிய என்னைப் வாடிக்கையாளர் பயன்படுத்த வேண்டும்.
லாகின் அல்லது அனுமதி
ரகசிய எண்ணை வைத்து ஆக்டிவேஷன் ஆன பிறகு வாடிக்கையாளர் தனது இணைய வங்கி லாகின் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தித் தன் கணக்கைப் பயன்படுத்த முடியும்.
பாதுகாப்பு
ஒவ்வொரு வங்கியும் தனக்கென வெவ்வேறு விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பரிமாற்றங்களுக்காகவும் சவுகரியமான அனுபவத்திற்காகவும் வைத்துள்ளன.
இதற்குக் கூடுதலாக ஓடிபி, கிரிட் ஆதெண்டிகெஷன் போன்ற பாதுகாப்புச் சரிபார்ப்பு முறைகளையும் வைத்துள்ளன.
வாடிக்கையாளர்கள் கவனிக்க
வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மொபைல் பேங்கிங் வசதியைப் பெற பதிவுசெய்ய வேண்டியது அவசியம். பாதுகாப்பை உறுதி செய்ய ஏடிஎம் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு ஒரே ரகசியக் குறியீட்டை பயன்படுத்துவதைத் தவிருங்கள்.