நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்து இருந்தால், அந்த கணக்கு திடீரென குளோஸ் ஆகிவிட்டதா? உடனே நீங்கள் உங்கள் கேஒய்சியை (KYC) அப்டேட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சியை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் நாம் குறிப்பிட்ட காலத்திற்கு கேஒய்சியை அப்டேட் செய்தால் நமது வங்கிக் கணக்கிற்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஒய்சி என்றால் என்ன?
Know your customer அதாவது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ள வேண்டும் என்பதன் சுருக்கம்தான் கேஒய்சி. ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம், முகவரி மற்றும் பிற தகவல்களை கேஒய்சி மூலம்தான் அறிந்துகொள்ளும். இதனால் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாக பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள்
வங்கியில் நீங்கள் முதன்முதலில் கணக்கு தொடங்கும் போது கேஒய்சி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகிகள் உங்களுக்கு அறிவுறுத்துவார்கள். வங்கிகள் வாடிக்கையாளர்கள் விவரங்களை அவ்வப்போது திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி அந்த வங்கிகளுக்கு கொடுத்த அறிவுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன ஆவணங்கள்?
கேஒய்சி அப்டேட் செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். ஒரு வாடிக்கையாளர் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், தனிநபர் அடையாள சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை அளித்தால் கேஒய்சி அப்டேட் செய்யப்படும். முகவரி மற்றும் அடையாள சான்றுக்கு இந்திய அரசு தரும் ஆவணங்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ,வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை, ஆதார் அட்டை, NREGA அட்டை போன்ற ஏதாவது ஒரு நிரந்தரமான முகவரி சான்றிதழ் ஆவணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள்
அதேபோல் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் அல்லது விசா நகல், வெளிநாட்டில் பணிபுரியும் அலுவலகம், நோட்டரி பப்ளிக் சான்றிதழ், இந்திய தூதரகம் தரும் ஆவணங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு சேவை விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவித்து வருகிறது. அவ்வாறு பூர்த்தி செய்யாத வங்கி கணக்குகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் விபரங்கள்
வங்கி கணக்கின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை வங்கி நிர்வாகம் தெரிந்துகொள்ளவும், அந்த வங்கி கணக்கிற்கு பணம் எங்கிருந்து வருகிறது? வங்கி கணக்கு உரிமையாளரின் தொழில் என்ன? அவர் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கான காரணம் என்ன? போன்றவற்றை வங்கி அறிந்து கொள்வதற்கு இந்த கேஒய்சி வழிகாட்டுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
மேலும் வாடிக்கையாளர்களால் வங்கிக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கேஒய்சி மூலம் தான் அந்த பிரச்சனை தீர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு வங்கி தனது வாடிக்கையாளரின் கேஒய்சி தகவல்களை கண்டிப்பாக அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு அப்டேட் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி வருகிறது.