மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி, கேஒய்சி (KYC) விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கேஒய்சி என்பது Know your customer, அதாவது ஒரு வாடிக்கையாளர் வங்கியில் கணக்கு தொடங்கும் போது அவர்களின் அடையாள ஆவணங்களை சரி பார்க்கும் நடைமுறைதான் கேஒய்சி என அழைக்கப்படுகிறது.
நிதி மோசடிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கும், சதி செயல்களுக்கும் நிதி செல்வதை தடுக்கும் வகையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி கேஒய்சி என்ற நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. இதன்படி அனைத்து வங்கிகளும் கேஒய்சி வழிகாட்டுதல் படி தங்களுடைய வாடிக்கையாளர்களின் அடையாளங்களை சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் முகவரி சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஆகியவற்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை இதில் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது பெரும்பாலான வங்கிகள் டிஜிட்டல் கேஒய்சி முறையை செயல்படுத்துகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவே பெற்று சரி பார்த்துக் கொள்கின்றன. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி கேஒய்சி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
1. ஏற்கனவே ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கி இருக்கும் வாடிக்கையாளர் மீண்டும் அதே வங்கியில் புதிய கணக்கை பெறுவதற்கு Customer Due Diligence செய்ய வேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு வேகமாக சேவைகள் கிடைக்கும்.
2. அதிக ஆபத்து கொண்ட கணக்குகள் ஹை ரிஸ்க் கணக்குகள் என ஒரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஹை ரிஸ்க் என கண்டறியப்பட்ட கணக்குகளை தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தி ஏதேனும் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கக்கூடிய வங்கிகளில் அவ்வப்போது தங்களுடைய கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும். உதாரணமாக அவர்களுடைய முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்களை மாறினால் உடனடியாக அதனை வங்கியில் அப்டேட் செய்ய வேண்டும்.
4. நிதி நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் கேஒய்சி தகவல்களை மத்திய கேஒய்சி பதிவு துறையில் (Central KYC Records Registry) அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்பட்டு அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மத்திய கேஒய்சி பதிவில் 7 நாட்களுக்குள் அதனை அப்டேட் செய்துவிட வேண்டும்.
5. மேலும் நிதி நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளரின் கேஒய்சி பதிவுகளை மத்திய கேஒய்சி பதிவு துறையில் இருந்து எடுத்து அடையாளங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
6. வாடிக்கையாளர்களை சிரமப்படுத்தாமல் எளிதான முறையில் கேஒய்சி செய்து முடிக்கவும், பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளர்களின் தரவுகள் இருப்பதை உறுதி செய்யவும், சதி செயல்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
எனவே இந்த நடவடிக்கைகள் மூலம் இனி வங்கிகளில் ஒரு புதிய கணக்கினை தொடங்குவது அல்லது kyc தகவல்களை அப்டேட் செய்வது உள்ளிட்டவை விரைவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications