இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் தங்கம் மீதான முதலீட்டுக்கு அதிகளவிலான லாபம் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை, கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் அதிகளவிலான முதலீடுகள் தங்கம் மீது குவிந்த காரணத்தால் இதன் மீதான முதலீட்டில் அதிக லாபம் கிடைத்தது.
தற்போது சந்தை கணிப்புகளைப் பார்க்கும் போது அடுத்த சில வாரங்களுக்குக் கட்டாயம் தங்கம் மீதான முதலீட்டுக்குத் தொடர்ந்து அதிகப்படியான லாபம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ஜூலை 16ஆம் தேதி சவ்ரின் கோல்டு பாண்ட் திட்டம் துவங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி, அரசு தள்ளுபடி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜூலை 16ஆம் தேதி துவங்கியுள்ள சவ்ரின் கோல்டு பாண்ட் திட்டத்தில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தை 4, 807 ரூபாய் விலையில் பத்திரமாக விற்பனை செய்யப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறையில் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வோருக்கு மத்திய அரசு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏன் தங்க பத்திரம் சிறந்தது..?
தங்கத்தை நேரடியாக வாங்குவதை விடவும் ஏன் பத்திர வடிவில் வாங்குவது சிறந்தது என எஸ்பிஐ சில முக்கியமான காரணங்களைத் தெரிவித்துள்ளது. இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நிலையில் தங்கத்தையும் டிஜிட்டல் முறையில் அதுவும் பத்திரமாக வாங்கும் வசதிகள் உருவாகியுள்ளது.
சவ்ரின் கோல்டு பாண்ட் திட்டம் குறித்து எஸ்பிஐ சொல்லும் 6 முக்கியமான நன்மைகள் என்ன..
அதிக லாபம்
இந்திய சந்தையில் இருக்கும் பிற தங்க முதலீட்டுத் திட்டங்களை விடவும் அதிகமான லாபத்தைத் தர கூடிய ஒன்றாகத் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் விளங்குகிறது. அதுமட்டும் அல்லாமல் மூலதனம் அதிகரிக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. மேலும் வருடம் 2.5 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
குறைந்த வரி
தங்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் 2.5 சதவீத வருடாந்திர வட்டி வருமானத்திற்கு வரி உண்டு, ஆனால் இப்பத்திர முதிர்வு காலம் வரையில் வைத்திருந்தால் கேப்பிடல் கெய்ன் டாக்ஸ் இல்லை. ஆனால் கோல்டு ஈடிஎப் அல்லது கோல்டு பண்டு திட்டத்தில் 3 வருடத்திற்குப் பின்பு உருவாகும் கேப்பிடல் கெய்ன்-க்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
கடன் உதவி
சவ்ரின் கோல்டு பாண்ட் என அழைக்கப்படும் தங்க பத்திரத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதைப் பினையாகக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற முடியும். வங்கிகள் இந்தத் தங்க பத்திரத்தை ஒரு சொத்தாகக் கருதி பணத்தைக் கடனாக அளிக்க முடியும்.
பாதுகாக்கப் பிரச்சனை இல்லை
பொதுவாக நாம் தங்கத்தை நகையாகவோ அல்லது காயினாகவோ அல்லது பார் ஆகவோ வாங்கினால் கட்டாயம் பாதுக்காக்க வைக்கப் பலவற்றைச் செய்வோம். உதாரணமாக வங்கியில் லாக்கர் பெறுவது முதல் வீட்டில் கூடுதல் பாதுகாப்பு கொண்ட அமைப்பை உருவாக்குவது வரை..
எளிதாக வங்கியில் லாக்கர் வாங்கினாலும் அதற்கு ஒவ்வொரு வருடமும் வாடகை, டெப்பாசிட் போன்றவற்றைக் கட்ட வேண்டும். ஆனால் தங்க பத்திரத்திற்கு இதுபோன்ற பாதுகாப்பு அவசியம் இல்லை, பத்திரமாகவோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ எளிதாகப் பாதுகாக்க முடியும்.
பணமாக்குதல்
தங்க பத்திரத்தை எளிதாகப் பணமாக்க முடியும், டிஜிட்டல் முறை என்றால் நொடிகளில் பணம் பெற முடியும். ஆனால் தங்கமாக வாங்கினால் கடைகளுக்குச் சென்று பல்வேறு சந்தை விலைக்கு ஏற்ப தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். சில இடத்தில் குறைவான விலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டி, செய்கூலி தொல்லை இல்லை
தங்கத்தை நகையாக வாங்கினால் ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் போன்ற பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் ஆனால் சவ்ரின் கோல்டு பாண்ட் என அழைக்கப்படும் தங்க பத்திரத்தில் இதுபோன்ற எவ்விதமான தொல்லையும் இல்லை.