தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முறை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என தேர்தல் ஆணையமும் பல நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இந்த தேர்தலில் முடிவை மாற்றி அமைக்கக்கூடியவர்களாக முதல் முறை வாக்காளர்களும் ,இளம் வாக்காளர்களும் இருக்கிறார்கள். தேர்தலில் முதன்முறையாக நான் வாக்களிக்க போகிறேன் என்பவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள்.அவர்களுக்கான ஒரு விரிவான வழிகாட்டி தான் இது.

வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னதாக உங்களுடைய பூத் ஸ்லிப் கட்டாயம் கையில் இருக்க வேண்டும், அதோடு வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய 12 முக்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களோடும் நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
உங்களின் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுங்கள். அங்கே வரிசை இருந்தால் வரிசையில் காத்திருக்க வேண்டும். உங்களின் பகுதிக்கான வாக்குப்பதிவு அறைக்கு செல்ல வேண்டும்.
வாக்கு மையத்திற்குள் மொபைல் ஃபோன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால் முன்கூட்டியே உங்களுடைய போனை சுவிட்ச் ஆப் செய்து மொபைல் போனை டெபாசிட் செய்வதற்கான இடத்தில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். அவர்கள் அதற்கு ஒரு டோக்கன் தருவார்கள்.
அடுத்ததாக வாக்களிக்கும் அறைக்கு செல்லுங்கள். அங்கே மூன்று அலுவலர்கள் இருப்பார்கள். முதல் அலுவலர் உங்கள் அடையாள அட்டை சோதித்து உங்களின் பாகம் எண் ,வரிசை எண் உள்ளிட்டவற்றை படிப்பார். அதை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் சரி பார்ப்பார்கள்.
இரண்டாவது அலுவலர் உங்களுடைய இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து உங்களுடைய கையெழுத்தையும் பெற்றுக் கொண்டு ஸ்லிப் வழங்குவார்.
அடுத்ததாக மூன்றாவது அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டாளராக இருப்பார். அவர் அந்த ஸ்லிப்பை வாங்கி பரிசோதித்து ஒரு பட்டனை அழுத்துவார். இதனை அடுத்து நீங்கள் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
வாக்குப்பதிவு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அது ஒரு மூடப்பட்ட இடமாக இருக்கும். அங்கே சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களுடைய வாக்கினை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் , பெயர் சின்னம் இருக்கும் அதற்கு நேரடியாக பட்டன்கள் இருக்கும். உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு நேராக உள்ள பட்டனை நீங்கள் அழுத்த வேண்டும். அப்போது பீப் என்று ஒலிக்கும்.
இதற்கு அருகிலேயே விவி பேட் இயந்திரம் இருக்கும். அது நீங்கள் எந்த சின்னத்தை அழுத்தினீர்கள் என்பதை காண்பிக்கும். அவ்வளவு தான் உங்களின் ஜனநாயக கடமை முடிந்து விட்டது.இதனை அடுத்து நீங்கள் வெளியே வந்து டோக்கனை திரும்ப கொடுத்து உங்களுடைய செல்போனை பெற்றுக் கொண்டு திரும்ப செல்லலாம்.


Click it and Unblock the Notifications

