இந்திய வங்கிகள் தனது கையிருப்பில் அதிகப்படியான நிதி வைத்திருக்கும் காரணத்தால், சந்தையில் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் போட்டிப்போட்டு வீட்டுக் கடனுக்கான வட்டியை அதிகளவில் குறைத்துள்ளது. இதன் மூலம் சந்தையில் தற்போது தேவையான அளவீட்டை விடவும் அதிகப்படியான பணப்புழக்கம் நிலவுகிறது.
இதன் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்து வேகமான வளர்ச்சிப் பாதைக்குச் சென்று வருகிறது. பெரும்பாலான வங்கிகளில் வட்டி மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் மக்கள் எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
முக்கிய வங்கிகள் வட்டி குறைப்பு
சமீபத்தில் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய முன்னணி வங்கிகள் புதிய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், தனது வாராக் கடன் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் மிகவும் பாதுகாப்பாக விளங்கும் வீட்டுக் கடன் பிரிவில் அதிகப்படியான கடனை அளித்து வருகிறது.
6.5 லட்சம் கோடி ரூபாய்
கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்திய வங்கிகளிடம் தற்போது உபரி பணப்புழக்க தொகையாகச் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை உள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டியாக வெறும் 2.5 சதவீத தொகை மட்டுமே அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வங்கிகளிடம் அதிகளவிலான நிதி கையிருப்பில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்த நிலைக்கு ரிசர்வ் வங்கியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா பாதிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைந்தது. இதனால் வங்கிகளுக்குக் கடனுக்கான வட்டியைக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புக் கிடைத்தது.
வீட்டுக்கடன் வர்த்தக வளர்ச்சி
இதேவேளையில் இந்திய வங்கிகளில் வீட்டுக்கடன் வர்த்தக வளர்ச்சி 17.5 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரி 2021ல் இதன் அளவு 7.7 சதவீதமாக இருந்தது. இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்தவும் இந்த வட்டி குறைப்பு பெரிய அளவில் உதவியது.
வாராக் கடன் பிரச்சனை
இந்திய வங்கிகளில் கடந்த சில மாதங்களாக வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் பாதுகாப்பான கடன் பிரிவில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் வீட்டுக் கடன் பிரிவு இந்திய வங்கிகளுக்கு முதலும் முக்கிய வர்த்தகமாக விளங்குகிறது.