21 வருடத்தில் முதல் முறையாக நிஃப்டி குறியீடு, 5 இலக்க அளவான 10,000 புள்ளிகளை எட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில், முதல் 6 நிமிடங்களில் அதிகளவிலான அன்னிய முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக நிஃப்டி குறியீடு 10,010.55 புள்ளிகள் வரையிலான உயர்வை எட்டியது.
இதன் மூலம் நிஃப்டி குறியீட்டுக்கு புதிய பென்ச்மார்க் நிறுவப்பட்டுள்ளது. சரி, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டின் இந்தப் புதிய உயர்வை அடைந்ததற்கு 7 காரணங்கள் சந்தையில் நிலவுகிறது.
ரிலையன்ஸ் ஆதிக்கம்..
நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் 40வது வருடாந்திர கூட்டத்தில் இந்நிறுவனத்தின் புதிய திட்டங்கள், போனஸ் பங்குகள் எனப் பல அறிவிப்புகள் பங்குச்சந்தையை வர்த்தகத்திற்குப் புதிய உந்து சக்தியாக உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 6 சதவீதம் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச பணப்புழக்கம்
BofA-ML செய்த ஆய்வில் 48 சதவீத பண்ட் மேனேஜர்கள் சர்வதேச அளவில் அதிகளவிலான பணப்புழக்கத்தை உருவாக்கும் வகையில் முக்கியப் பொருளாதார நாடுகளின் நாணய கொள்கைகள் உள்ளது.
ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய அனைத்து முக்கியப் பொருளாதார நாடுகளும், தனது நாணய கொள்கையை மாற்றாமல் தொடர்ந்து நிலையான கொள்கையை வைக்க முடிவு செய்துள்ளது. இது ஆசிய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
முதல் காலாண்டில் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வரி விதிப்புகள் ஜூலை மாதம் அமலாக்கம் செய்யப்பட்டது, இதனால் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் எவ்விதமான தாக்கங்களும் ஏற்படவில்லை.
சமீபத்தில் எச்டிஎப்சி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் முடிவுகள் கூட மிகவும் சிறப்பாக இருந்தது.
எப்ஐஐ முதலீடு ஈர்ப்பு
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய சந்தையில் அன்னிய நிறுவன முதலீட்டு வாயிலாகச் சுமார் 1,60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எப்பிஐ 2017ஆம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் மட்டும் சுமார் 27,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் இந்திய சந்தையின் மீது அன்னிய முதலீட்டாளர்கள் மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி
நாட்டின் பணவீக்கம் அதிகளவில் குறைந்த காரணத்தால் ரிசர்வ் வங்கி அடுத்து நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் கண்டிப்பாக வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 1-2 ஆம் தேதி நடைபெறுகிறது.
பொருளாதார வளர்ச்சி
2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதமாக உயரும் எனச் சர்வதேச நாணய நிதியம் தெவித்துள்ளது.
இதேபோல் நித்தி அயோக் தலைவர் அரவிந்த் பணாகிரியா கூறுகையில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதம் அளவிற்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது இந்திய பங்குச்சந்தைக்கு அன்னிய முதலீட்டை ஈர்க்க முக்கியக் காரணமாக உள்ளது.
ஷார்ட் கவரிங்ஸ்
மும்பை பங்குச்சந்தை அடுத்தச் சில வாரங்களுக்குக் கண்டிப்பாக உயர்வுடனே காணப்படும் நிலையில், பியூச்சர் சந்தையில் முதலீட்டாளர்களின் ஷார்ட் கவரிங்ஸ் செய்யப்பட்டதன் காரணமாக அதிகளவிலான பங்கு முதலீட்டை ஈர்க்க உள்ளது. இது இன்றைய சந்தை வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணமாக விளங்குகிறது.