மும்பை, இந்தியா: கடந்த ஜூலை 05, 2019 அன்று தான், இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அன்று காலை சென்செக்ஸ் 39,476 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 38,720 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று சென்செக்ஸ் சுமாராக 36,695 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆக ஜூலை 05, 2019 அன்று முதல் இன்றைய வர்த்தக புள்ளிகள் வரைக் கணக்கிட்டால் சரியாக 7 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
பணக்காரர்கள் மீது விதித்த கூடுதல் சர் சார்ஜ் வரி, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களை முழுமையாக பாதித்து இருக்கிறதாம். அதோடு யார் எல்லாம் ட்ரஸ்டாக பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களையும் பாதிக்கிறதாம். தற்போது சுமார் 40 சதவிகித வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், தங்களை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும் என்கிற சிக்கலில் தவிப்பதாக சில அறிக்கைகள் சொல்கின்றன.
மேலே சொன்ன காரணங்களால் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், கடந்த சில வாரங்களாக, இந்திய சந்தைகளில் மேற்கொண்ட முதலீடுகளைத், தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதிக வரி செலுத்துவதற்கு பதிலாக, முதலீடுகளை விற்று வெளியேற விரும்புகிறார்கள் போல. எனவே இந்திய சந்தைகளும் பெரிய அழுத்தத்தினால் சரிந்து கொண்டே இருக்கிறது.
கடந்த ஜூலை 2019-ல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், நம் இந்திய சந்தைகளில் செய்த முதலீட்டில் 16,870 கோடி ரூபாயை விற்று இருக்கிறார்கள். இந்த ஆகஸ்ட் 2019-லும் தங்கள் முதலீடுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நேற்று இந்த வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் கேஷ் மார்க்கெட்டில் (Spot Market) மட்டும் 1,085 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை விற்று இருக்கிறார்கள் என்கிற காரணமும் நேற்றைய சந்தையின் பெரிய சரிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், இந்தியாவில் மேற்கொண்ட முதலீடுகளை விற்க, இந்திய பொருளாதார மந்த நிலையும் ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. அதை இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனைச் சரிவைப் பார்த்தாலே தெரிகிறது. ஆட்டோமொபைல் விற்பனை சரிவால், ஆட்டோமொபைல் கடன்கள் சரியும், இதனால் வங்கி வியாபாரத்திலும் ஒரு தேக்க நிலை உருவாகும் என்கிறார்கள் அனலிஸ்டுகள். தற்போது சந்தை ஒரு நிலை இல்லாமல் விழுந்து கொண்டிருப்பதால், இப்போதைக்கு முதலீடு செய்ய வேண்டாம். சந்தை முழுமையாக தன் இறக்கப் பாதையை முடித்துக் கொள்ளட்டும் அதன் பிறகு தரமான பங்குகளை வாங்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள். தற்போது சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் உஷாராக தங்கள் வியாபாரத்தைப் பார்க்கும் படியும் எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள்.