கடந்த பல நாட்களாகவே பங்கு சந்தைகள் ஊசலாடிக் கொண்டு வருகின்றன. இன்னும் கூட உண்மையை சொல்லப்போனால் சென்செக்ஸ் அதன் வரலாற்றில் இல்லாதளவுக்கு ஒரே நாளில் கிட்டதட்ட 4,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 3,934 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,981 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 1,135 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,610 ஆக முடிவடைந்துள்ளது.
இது தான் இப்படி எனில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு 76.17 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா என்றால் என்ன?
வீழ்ச்சி. சரிவு, நஷ்டம் முடக்கம், கஷ்டம், துன்பம், லாஸ் என அனைத்து வார்த்தைகளுக்கு ஒரு மதிப்புடைய ஒரு சொல் இருக்கக் கூடுமானால் அதற்கு பெயர் கொரோனா என்று கூட வைக்கலாம். ஏனெனில் அந்தளவுக்கு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. ஏன் கடந்த ஜனவரி மாதத்திலும் பிப்ரவரி மாதத்திலும் சீனாவில் என்னவெல்லாம் நடந்தது என்று செய்திகளில் படித்தோமோ, அதை இன்று அது நம் கண் முன் நிறுத்தியுள்ளது.
144 தடை உத்தரவு
இன்னும் அதை தெளிவாக சொல்ல வேண்டுமானால் தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவினை அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிர் கொல்லி நோயான இந்த கொரோனா அதிகமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தாலே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு கருத்தில் கொண்டு 144 உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு தான் முக்கியம்
இந்த 144 உத்தரவு மக்களின் அடிப்படை ஆதாரங்களை முடக்கும் என்றாலும், மக்களை பாதுகாக்க வேறு வழியில்லையே. எனினும் இந்த முக்கிய நடவடிக்கையினால் மக்களின் நுகர்வும் குறையும், தேவையும் குறையும். இன்னும் பல தொழில்சாலைகள், அலுவலகங்கள் என பலவும் மூட வழிவகுக்கும்.
நிதித்துறையில் தாக்கம்
இதன் ஒட்டுமொத்த தாக்கமும் எங்கே போகும் நிதித்துறைக்கு தான். அதெப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு நிறுவனம் வங்கியில் கடன் வாங்கியுள்ளது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனங்கள் அதை செலுத்தவும் முடியாது. இதனால் வங்கிகளுக்கும் செலுத்த முடியாது. இன்னொரு புறம் ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க முடியாது.
கடன் செலுத்த முடியாமல் தவிக்கலாம்
உற்பத்தியும இல்லை, டெலிவரியும் இல்லை, பணப்புழக்கம் வீழ்ச்சி, மேற்கொண்டு கடனும் வாங்க முடியாது. இந்த நிலையில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கின்றன. இதனால் ஊழியர்களும் தாங்கள் மாத மாதம் செலுத்த வேண்டிய கடன் தொகையினை செலுத்த, முடியாமல் தவிக்கலாம். ஆக இதனால் முழுக்க நேரிடையாக பாதிக்கப்படப் போவது வங்கிகள் தான்.
பங்கு விற்பனை
அதனை உணர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் அவரது உணர்வுகள் வங்கி துறையில் உள்ள பங்குகளை பாதுகாப்பு கருதி விற்று விட்டு வெளியே வருவது தான். அதிலும் நாளுக்கு ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருவதால் வங்கிகளுக்கு இன்னும் மறைமுகமாக பல பிரச்சனைகள் உள்ளன. மேலும் ஆர்பிஐ தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவினைப் போல் அவசர கால வட்டி குறைப்பு செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
பேங்க் நிஃப்டி வீழ்ச்சி
ஆக இப்படியாக பல வகையில் வங்கிப் பங்குகள் பெருத்த அடி வாங்கியுள்ளன. கூறிப்பாக பேங்க் நிஃப்டி குறியீடு 17% வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் ஏற்கனவே பொருளாதார சரிவில் இருக்கும் இந்தியா, தற்போது இதனை எதிர்கொள்ளப் போகிறதோ? ஏனெனில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் சீனாவே இந்த வைரஸால் ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்தியா இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற ஒற்றை கேள்வி அனைத்து முதலீட்டாளர்கள் மனதிலும் எழுந்துள்ளது.
எந்த பங்கு எவ்வளவு வீழ்ச்சி
- ஹெச்டிஎஃப்சி பேங்க் 12.61% வீழ்ச்சி
- ஐசிஐசிஐ வங்கி - 17.85% வீழ்ச்சி
- ஆக்ஸிஸ் வங்கி - 27.91% வீழ்ச்சி
- எஸ்பிஐ - 13.46 வீழ்ச்சி
- யெஸ் பேங்க் - 13.30% வீழ்ச்சி
- இந்தஸிந்த் பேங்க் 23.59% வீழ்ச்சி
- ஆர்பிஎல் பேங்க் - 17.89% வீழ்ச்சி
- பேங்க் ஆப் பரோடா - 14.86% வீழ்ச்சி
- பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.96% வீழ்ச்சி
- ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் - 11.89% வீழ்ச்சி
- பெடரல் வங்கி 24.20% வீழ்ச்சி என முக்கிய வங்கிக் பங்குகள்
அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த நிலையில்
அதிகபட்சமாக ஆக்ஸிஸ் பேங்க் 28% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்யப் போகிறது அரசு?
இப்படி தொடர் வீழ்ச்சி கண்டு வருவதனால் அனைத்து முதலீடுகளும் வெளியேற வாய்ப்புள்ளது எனினும், அமெரிககாவினை போல அதிரடி நடவடிக்கையை இந்தியாவினால் எடுக்க முடியுமா? வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு என்ன செய்யப்போகிறது? மாத மாதம் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்.ஐ தொகை தகுந்த கால அவகாசம் வழங்கப்படுமா? எந்த இந்த வீழ்ச்சியினை ஈடுகட்ட போகிறோம். அரசு என்ன செய்யப் போகிறது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.