இந்த நாள் சத்தியமாக பல ஆச்சர்யங்களை அடக்கி வைத்திருக்கும் நாளாகவே அமைந்து இருக்கிறது. குறிப்பாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு.
இன்று காலை சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 3,300 புள்ளிகளுக்கு மேல் (சுமாராக 10 சதவிகிதம்) வீழ்ச்சி கண்டது.
எனவே இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் பங்குச் சந்தைகள் வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ்
தற்போது சென்செக்ஸ் சுமாராக 1,439 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது 34,217 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒரு நல்ல ஏற்ற புள்ளியில் சென்செக்ஸ் நிறைவடைந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
நிஃப்டி
சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் சுமாராக 438 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது 10,028 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் நிஃப்டி 10,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
விட்டதைப் பிடிக்கும் பங்குகள்
எஸ்பிஐ 14.9 % விலை ஏற்றம்
பாரத் பெட்ரோலியம் 13.83 % விலை ஏற்றம்
சன் பார்மா 12.63 % விலை ஏற்றம்
க்ராசிம் 11.14 % விலை ஏற்றம்
ஹெச் டி எஃப் சி 9.91 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
நஷ்டத்தில் சில பங்குகள்
யூ பி எல், நெஸ்ட்லே, டெக் மஹிந்திரா, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் தொடர் விலை சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 10 சதவிகிதம் 12 சதவிகிதம் என பயங்கர சரிவைக் காட்டிக் கொண்டிருந்த கொடுமைக்கு இந்த நஷ்டக் கணக்கு ஓகேவாகத் தான் தோன்றுகிறது.
பங்கு நிலவரம்
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,362 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,189 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,026 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 147 பங்குகளின் விலை மாற்றமின்றி வர்த்தகமாகின்றன. வெறும் 10 பங்குகள் தன் 52 வார விலை உச்சத்தையும், 1,269 பங்குகளின் விலை 52 வார விலை குறைவையும் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.