நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வரா கடன் அளவில் அதிகளவில் பங்கு வகிக்கும் 12 நிறுவனங்கள் மற்றும் கணக்குகளைத் திவாலாக அறிவிக்கும் பணிகளைச் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கி வராக்கடனுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் கணக்கின் உரிமையாளர் சொத்துக்களை முடக்க உள்ளது இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் அளவு அதிகளவில் குறைந்து வலிமையான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலி இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 300 புள்ளிகள் வரை உயர்ந்து அசத்தியது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்
கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சரிவை சந்தித்த நிலையில் எஸ்பிஐ வங்கியின் வராகடன் குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு பங்குச்சந்தை வர்த்தகத்தை உயர்வுக்குக் கொண்டு சென்றது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுமார் 300 புள்ளிகள் வரை உயர்ந்து அசத்தியது.
255 புள்ளிகள் உயர்வு
ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தில் மதியம் 1.30 மணி வரை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இந்நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 255.17 புள்ளிகள் உயர்ந்து 31,311.57 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலேவை நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 69.50 புள்ளிகள் உயர்ந்து 9,657.55 புள்ளிகளை எட்டியது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் 1.44 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
அதேபோல் இன்போசிஸ், சன்பார்மா, டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.