இன்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக சில முக்கிய விஷயங்களை அறிவித்து இருக்கிறார். அதனால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் மெல்ல தலை அசைத்து இருக்கிறார்கள். எனவே வரும் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே சென்செக்ஸும் சரி, நிஃப்டியும் சரி ஒரு நல்ல ஏற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கலாம்.
நேற்று நேற்று காலை சென்செக்ஸ் 37,175 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,384 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. முந்தைய குளோசிங் புள்ளியை விட, நேற்றைய குளோசிங் 280 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,986 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,075 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய குளோசிங் புள்ளியை விட நேற்றைய குளோசிங் 93 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
நேற்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. நேற்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 41 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,638 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,513 பங்குகள் ஏற்றத்திலும், 960 பங்குகள் இறக்கத்திலும், 165 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,638 பங்குகளில் 35 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 83 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
நேற்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்மா இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், டைடன் கம்பெனி, கெயில், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சன் பார்மா, ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடிசி போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.98-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.43 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.