மும்பை: "அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்து விட்டது போலத் தெரிகிறது. தற்போது சந்தை நிலவரங்களைப் பார்க்கும் போது, இது பங்குகளை வாங்க சரியான நேரம் என நான் நம்புகிறேன். ஆனால் சந்தை உடனடியாக ஏற்றம் கண்டு நமக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது" என நடு நெற்றியில் அடித்துச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா.
மேலும் "ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் எல்லாம் சந்தை செண்டிமெண்ட் மாறாது, நாம் நிறைய விஷயங்களை மாற்றினால் தான் சந்தையின் செண்டிமெண்ட் மாறும்" எனவும் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்த விஷயங்களால் இந்தியப் பொருளாதாரத்தின் செண்டிமெண்ட் மாறும் எனவும் சொல்லி இருக்கிறார். ஆக இத்தனை பெரிய முதலீட்டாளரே சொல்லும் போது சந்தை மீண்டு மேலே எழுந்து வருவது கொஞ்சம் சிரமமான விஷயம் தன என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மேம்படுத்தச் சொன்ன விஷயங்கள், இரண்டு நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தகத்தை உயர்த்தியது. மூன்றாவது நாளான நேற்றும், நான்காவது நாளான இன்றும் சந்தை மீண்டும் தன் போக்கில் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை சென்செக்ஸ் 37,381 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,068 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 382 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,996 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,948 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 97 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,639 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 898 பங்குகள் ஏற்றத்திலும், 1,583 பங்குகள் இறக்கத்திலும், 158 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,639 பங்குகளில் 28 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 220 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. மெட்டல், பார்மா போன்ற துறைகள் மட்டுமே நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி, யெஸ் பேங்க், ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. சன் பார்மா, பார்தி இன்ஃப்ராடெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், என் டி பி சி, வேதாந்தா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
எஸ்பிஐ, யெஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.76-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.03 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.