கடந்த சனிக்கிழமை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையை மீட்டு எடுக்க சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளால் பங்குச் சந்தை இன்று ஒரு நல்ல ஏற்றம் காணும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தார்கள். ஆனால் சந்தை இன்று 260 புள்ளிகள் இறக்கம் கண்டு நிறைவு அடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இறக்கம் கண்டாலும் மிட் அண்ட் ஸ்மால் கேப் ரக பங்குகள் சிறப்பாக ஏற்றம் கண்டு வர்த்தகமாகி இருப்பதை சந்தை அனலிஸ்டுகள் ஒரு பாசிட்டிவ் சிக்னலாகத் தான் பார்க்கிறார்கள். எனவே சந்தை இனி வரும் வாரங்களில் ஒரு நல்ல ஏற்றத்தை காணும் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
அதோடு இந்தியாவின் வாரன் பஃபெட் எனச் செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும் , இந்தியாவின் மிட் கேப் பங்குகள் தன் அதிகபட்சம் இறக்கத்தை தொட்டு விட்டது, இனி ஏற்றம் காணத் தொடங்கும், எனவே நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யச் சொல்லி இருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
எனவே இனி வரும் வாரங்களில் சந்தை ஒரு நல்ல ஏற்றத்தை காணத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சென்செக்ஸ் வழக்கம் போல இறக்கம் காணத் தொடங்கினால் 37,000 முதல் சப்போர்ட்டாகவும், 36,400 இரண்டாவது மற்றும் வலுவான சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை நல்ல செய்திகள் வந்து ஏற்றம் காணத் தொடங்கினால் 37,410 முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 37,750 இரண்டாவது வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கும்.
இன்று காலை சென்செக்ஸ் 37,204 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,123 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 261 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,994 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,003 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 72 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 36 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,696 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,369 பங்குகள் ஏற்றத்திலும், 1,150 பங்குகள் இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,696 பங்குகளில் 41 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 97 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று பி எஸ் இ இண்டெக்ஸ்களில் கலவையாக சில துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்திலும், சில துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. எஃப் எம் சி ஜி, ஐடி, ஹெல்த்கேர், ஐடி, டெலிகாம் துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. எனர்ஜி, எண்ணெய் மற்றும் கேஸ் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி, யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. டைடன் கம்பெனி, பிரிட்டானியா, ஓ என் ஜி சி, டெக் மஹிந்திரா, நெஸ்ட்லே போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பாரத் பெட்ரோலியம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, யூபிஎல், எஸ்பி ஐ, யெஸ் பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.55-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 65.36 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.