அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், உலக பொருளாதாரத்தை மேம்படுத்த, குறைந்த வட்டியில் கடன் கிடைக்க தன் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து இருப்பது கிட்டதட்ட உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கு சமமாகப் பார்க்கப்படுகிறது.
அதோடு சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை பெரிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாவது, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 70 ரூபாய்க்குக் கீழ் இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, ஆகஸ்ட் முதல் பலவீனமாகவே 70 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருவது, போன்ற காரணங்களால் இந்திய சந்தை மேலும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 05 ஆகஸ்ட் 2019, 23 ஆகஸ்ட் 2019, 04 செப்டம்பர் 2019, 17 செப்டம்பர் 2019 ஆகிய வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் தன் 36,400 என்கிற வலுவான சப்போர்ட் மீது பலப் பரிட்சை நடத்தி இருப்பதை இன்று காலை செய்தியில் சொல்லி இருந்தோம். இப்படி நான்கு முறை பலப் பரிட்சை நடத்தித் தோற்ற சப்போர்ட் என்பதால் இறக்கம் மேலும் கொஞ்சம் வலுவாகத் தான் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். சொன்னது போலவே சந்தை மேலும் இறக்கம் கண்டு சுமார் 470 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸ் கடந்த ஆகஸ்ட் 05 முதல் இன்று வரை தொட்ட தற்போது அதிகபட்சமாக 37,780 என்கிற லெவல்களைத் தான் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. எனவே அதிகபட்சமாக 35,050 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிய வாய்ப்புகள் இருப்பதாக டே சார்ட் சொல்கிறது.
எனவே நாளையும் சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கினால் 36,000 முதல் சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். அதை நாளை எளிதில் உடைத்துக் கொண்டு இறக்கம் காணத் தொடங்கினால் 35,600 அடுத்த வலுவான சப்போர்ட்டாக வந்து நிற்கும். ஒருவேளை அதையும் உடைத்துக் கொண்டு கீழே போனால் 35,400 அடுத்த சப்போர்ட்டாக வரும். ஒருவேளை ஏற்றம் காணத் தொடங்கினால் 36,000 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும்
இன்று காலை சென்செக்ஸ் 36,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,093 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 470 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,845 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,704 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 135 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 43 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,628 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,777 பங்குகள் ஏற்றத்திலும், 121 பங்குகள் இறக்கத்திலும், 121 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,628 பங்குகளில் 31 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 116 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று பி எஸ் இ இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் சுமார் 1 % இறக்கத்தில் வர்த்தகமாயின. வங்கி, எனர்ஜி, ஆயில் & கேஸ் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், யூபிஎல், ஹெச் டி எஃப் சி பேங்க், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.33-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.89 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.