இன்று சந்தையை தூக்கிக் கொண்டு போக, மேக்ரோ ரீதியாக செய்திகள் வரவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நல்ல செய்திகள் வந்து சந்தையை ஏற்றம் காண வைத்ததாகச் சொல்லலாம். பந்தன் பேங்க், ஹேவெல்ஸ் இந்தியா, விப்ரோ, யெஸ் பேங்க், என பல நிறுவன பங்குகளின் விலை இன்று ஓரளவுக்கு ஏற்றம் கண்டு இருக்கின்றன.
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் வேதாந்தா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஓ என் ஜி சி, ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகளின் விலை சுமார் 2.4 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் அதிகரிக்க உதவியது.
அதோடு சென்செக்ஸ் 38,500 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளியையும் கடந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் 38,635 புள்ளியைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் சென்செக்ஸின் 30, 50, 150, 200 நாள் மூவிங் ஆவரெஜ்களிலேயே அதிக புள்ளிகள் இருப்பது 150 நாள் மூவிங் ஆவரேஜ் தான். ஆக அந்த 150 நாள் மூவிங் ஆவரேஜ் 38,256 புள்ளியாக இருக்கிறது. அதையும் கடந்து இன்று சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவு அடைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.
ஒரு வேளை சந்தை நாளையும் ஏற்றம் கண்டால், 38,500 புள்ளிகளுக்கு மேல் நிற்பது பெரிய விஷயம் தான். காரணம் 38,500 சப்போர்ட் எடுக்கும் அளவுக்கு சென்செக்ஸிடம் வலுவான செய்திகள் இல்லை. ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டால் 38,750 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பிறகு அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகப் பார்த்தோமானால், 39,000 தான் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,250 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகும் சந்தை சரிந்தால், 38,000-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,214 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,316 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,506 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 291 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,360 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,428 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 87 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 41 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,657 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,080 பங்குகள் ஏற்றத்திலும், 1,398 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,657 பங்குகளில் 36 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 294 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, மெட்டல், வங்கி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஈஷர் மோட்டார்ஸ், வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ குழுமம் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், பார்தி இன்ஃப்ராடெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.54-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.82 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.