கடந்த செப்டம்பர் 24, 2019 முதல் அக்டோபர் 09, 2019 வரையான அனைத்து வர்த்தக நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இரண்டு நாள் மட்டுமே சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இருக்கிறது. செப்டம்பர் 26, 2019 மற்றும் அக்டோபர் 09, 2019 தான் அந்த இரண்டு நாட்கள். இப்படி ஏற்றம் காண்பதும், மீண்டும் சந்தை இறக்கம் காண்பதும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாக இருக்கிறது. சென்செக்ஸ் ஒரு சில வர்த்தக நாட்கள் கூட தொடர்ந்து நிலையாக 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடையவில்லை.
ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் நல்ல செய்தி அல்லது, மேக்ரோ பொருளாதாரம் சார்ந்த காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பி இருப்பது என எந்த ஒரு செய்தியும் வலுவாகவும் நல்ல மொமெண்டத்தோடும் இல்லை. எனவே சந்தை மந்தமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸை டெக்னிக்கலாகப் பார்த்தால், 38,200 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது காரணம் 38,200 150 நாட்களுக்கான மூவிங் ஆவரேஜாக இருக்கிறது. அதே போல 30 நாள் மூவிங் ஆவரேஜ் 37,561 புள்ளிகளாக மட்டுமே நிற்கிறது. ஆக சந்தை தேங்கி நிற்பதையே இந்த மூவிங் ஆவரேஜ் விவரங்கள் காட்டுகின்றன.
ஒருவேளை நாளையும் சென்செக்ஸ் சந்தை, ஏற்றம் காணத் தொடங்கினால் 38,000 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பின் 38,200 இரண்டாவது மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். காரணம் இந்த 38,200 என்பது சென்செக்ஸின் 150 நாள் மூவிங் ஆவரேஜ். அதன் பிறகு அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகப் பார்த்தோமானால், 38,500 மற்றும் 38,850 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 37,600 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகும் பெரிய அசம்பாவிதங்கள் சந்தையில் நிகழ்ந்தால் 37,400 அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,177 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,130 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,880 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 297 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,280 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,234 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 78 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 08 பங்குகள் ஏற்றத்திலும், 22 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 35 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,629 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 878 பங்குகள் ஏற்றத்திலும், 1,567 பங்குகள் இறக்கத்திலும், 184 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,629 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 265 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பார்மா தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அரசு வங்கி, தனியார் வங்கி, நிதி சேவைகள், ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், க்ராசிம், ரிலையன்ஸ், ஹெச் சி எல் டெக், ஹெச் யூ எல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், யெஸ் பேங்க், கெயில், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.04-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.19 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.