கடந்த செப்டம்பர் 06, செப்டம்பர் 09, செப்டம்பர் 11 என கடந்த மூன்று வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவு அடைவது மே 20, 2019-க்குப் பிறகு இதுவே முதல் முறை. தற்போது சென்செக்ஸை தூக்கி நிறுத்த ஃபண்டமெண்டலாக எந்த ஒரு வலுவான காரணிகளோ, நல்ல செய்திகளோ இல்லை. எனவே டெக்னிக்கலாகப் பார்த்தால் சென்செக்ஸ் டே சார்ட்டில் இன்றைய தேதிக்கு ஒரு டோஜி கேண்டில் தோன்றி இருக்கிறது. எனவே கடந்த செப்டம்பர் 04, 2019-ல் இருந்து கண்டு வரும் ஏற்றம் இன்றுடன் முடிவடைய நிறைய வாய்ப்பு இருக்கிறது.
எனவே நாளை சந்தை இறக்கம் காணவே அதிக வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டாளர்கள் ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள். சரி ஒருவேளை சந்தை வேறு ஏதாவது காரணங்களால் ஏற்றம் காணத் தொடங்கினால் 37,410 முதல் ரெசிஸ்டென்ஸாகவும் 37,750 இரண்டாவது மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை நம் டெக்னிக்கல் கணிப்புகள் படி இறக்கம் காணத் தொடங்கினால் 37,000 முதல் சப்போர்ட்டாகவும், 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
காலை சென்செக்ஸ் 37,251 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,270 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 125 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,028 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,035 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 32 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,775 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,846 பங்குகள் ஏற்றத்திலும், 776 பங்குகள் இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,775 பங்குகளில் 44 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 120 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐடி, பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
விப்ரோ, ஓ என் ஜி சி, கெயில், ஹெச் சி எல் டெக், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.70-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை 62.96 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.