மும்பை: கடந்த ஜூலை 05, 2019 பட்ஜெட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 22, 2019 அன்று தான் சென்செக்ஸ் 36,500-க்குக் கீழ் முதல் முறையாக வர்த்தகம் நிறைவடைந்தது. நல்ல வேளையாக அடுத்த நாள் (ஆகஸ்ட் 23, 2019) அன்று சந்தை கொஞ்சம் ஏற்றம் கண்டு 36,701-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஆகஸ்ட் 23, 2019 அன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். அதன் பின் தான் நேற்று (ஆகஸ்ட் 26, 2019) சந்தை ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டு 37,494 என்கிற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல் ஒரு நல்ல ஏற்றம் இன்றும் இருக்கும் என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பேராவல் உடன் சந்தைக்கு வந்தால் இன்று கதையே வேறாக இருக்கிறது.
இன்று சந்தைகள் மிதமாக ஏற்றம் கண்டிருப்பதைப் பார்த்தால், நிதி அமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் மொமெண்டம் இல்லாமல் ஒரே நாளில் தொய்வடைந்ததாகத் தான் தெரிகிறது. ஆக முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் அரசிடம் இருந்து இன்னும் எதையோ பெரிதாக எதிர் பார்க்கிறார்கள் போல என்று தான் தோன்றுகிறது. சரி டெக்னிக்கல் சமாச்சாரங்களுக்கு வருவோம்.
இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் 37,410 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளியைக் கடந்து, அதன் மேலேயே இரண்டாவது நாளாக வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய சென்செக்ஸ் குளோசிங் 37,641. சரி மேற்கொண்டு ஏற்றம் காணத் தொடங்கினால் 37,850 முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 38,000 இரண்டாவது மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை இறக்கம் காணத் 37,410 சுமாரான சப்போர்ட்டாகவும், 37,000 முதல் வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வழக்கம் போல 36,400 லெவல்களை இரண்டாவது வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்வோம்.
இன்று காலை சென்செக்ஸ் 37,658 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,641 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே, நேற்றைய குளோசிங் புள்ளியை விட 164 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 147 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,106 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,105 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 47 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,689 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,669 பங்குகள் ஏற்றத்திலும், 864 பங்குகள் இறக்கத்திலும், 156 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,689 பங்குகளில் 36 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 181 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி இண்டெக்ஸ் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கி, மெட்டல் போன்ற துறைகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி, ஹீரோ மோட்டோகார்ப், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா, டாடா ஸ்டீல், கெயில், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், இந்தியா புல்ஸ் ஹவுசிங், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, க்ராசிம் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.60-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.75 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.