ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன் காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கும் இந்த நேரத்தில், பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலையன்ஸ் பங்கின் விலை இன்று ஒரே நாளில் 1.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அதே போல, யெஸ் பேங்கின் பங்கு மட்டும் சுமாராக 8.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இந்த பங்கும் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸுக்குள் இருப்பதால் இந்த பங்கின் 8 சதவிகித வளர்ச்சியும் சென்செக்ஸின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் யெஸ் பேங்க் தவிர, மாருதி சுசூகி, பவர் கிரிட், என் டி பி சி போன்ற போன்ற பங்குகளின் விலை சுமார் இரண்டு சதவிகிதம் வரை ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் ஏற்றம் காண உதவியது.
அதோடு சென்செக்ஸ் 39,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் தொடர்ந்து, இரண்டாவது நாளாக கடந்து வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. அதோடு கடந்த அக்டோபர் 10, 2019 (37,531) முதல் இன்று வரை (39,298) சின்ன சின்ன இறக்கங்களுடன் ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டிருக்கிறது சென்செக்ஸ். எனவே ஏற்றத்துக்கான டிரெண்ட் அமைந்து இருக்கிறது.
அதோடு கடந்த 17 ஜூலை 2019 அன்று 39,215-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது, 23 செப்டம்பர் 2019 அன்று 39,090-க்கு நிறைவடைந்தது, 17 அக்டோபர் 2019-ல் 39,052 புள்ளிகளில் நிறைவடைந்தது எல்லாமே ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனைக் காட்டுகிறது. இந்த பேட்டனில் 39,200 புள்ளிகளை உடைத்தாலே ஏற்றத்தை உறுதி செய்யலாம். ஆக வரும் திங்கட்கிழமை எந்த ஒரு பெரிய நெகட்டிவ் செய்திகள் இல்லை என்றாலே போதும் சென்செக்ஸ் நல்ல ஏற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கலாம். இந்த ஏற்றத்துக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றால் அடுத்த சில வாரங்களில் சென்செக்ஸ், சுமாராக 1,250 புள்ளிகள் வரை அசால்டாக ஏற்றம் காணலாம். இது டெக்னிக்கலாக ஒரு நல்ல பாசிட்டிவ் செய்தி தான்.
ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால் கூட, 39,500 புள்ளிகளைக் கடப்பது பெரிய விஷயம் தான். காரணம் 39,500 லெவல்களை கடந்த ஜூலை 05-ம் தேதிக்குப் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் இந்த 39,500 லெவல்களைத் தொட்டதில்லை என்பது டெக்னிக்கலாக ஒரு நெகட்டிவ் செய்தியாக இருக்கிறது. ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டால், 39,500-ஐக் கடந்தால், அடுத்த டார்கெட் 39,750 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். ஆக டார்கெட் 40,500 என வைத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 39,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு நாள் மட்டுமே 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவு அடைந்து இருப்பதால் அதை வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அடுத்த வலுவான சப்போர்ட்டாக 38,700-ஐ எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகும் சந்தை சரிந்தால், 38,500-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,052 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,298 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 246 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,580 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,661 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 75 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,707 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,608 பங்குகள் ஏற்றத்திலும், 922 பங்குகள் இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,707 பங்குகளில் 60 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 202 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல், அரசு வங்கி, ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், க்ராசிம், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா மோட்டார்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.17-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.11 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.