கடந்த ஆண்டில் தான் கொரோனா ரணகளத்திற்கும் மத்தியில், முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சந்தைகள் வருட கடைசியில் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்தன.
புதிய உச்சத்திற்கு மேல் உச்சமாக ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்களை இந்திய பங்கு சந்தைகள் குதூகலப்படுத்தின. தற்போது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டுள்ளன.
கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்றும் புதிய உச்சத்தில் தான் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளன.
இன்று காலையில் சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சந்தை வலுவான ஏற்றத்திலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 236.65 புள்ளிகள் அதிகரித்து, 48,105.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.40 புள்ளிகள் அதிகரித்து, 14,092.90 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பேங்க் நிஃப்டி குறியீடு தவிர, மற்ற நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே முடிவடைந்தன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, டிசிஎஸ் பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, டிசிஎஸ், ஹெச் சி எல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ஏற்றத்துக்கு என்ன காரணம்
இந்திய சந்தைக்கு சாதகமாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகின்றது.அதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் வருடத்தின் முதல் நாளே புதிய உச்சத்தில் முடிவடைந்துள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் இன்று முடிவில் சென்செக்ஸ் 307.82 புள்ளிகள் அதிகரித்து, 48,176.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 114.40 புள்ளிகள் அதிகரித்து, 14,132.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, கடந்த அமர்வில் 73.29 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று 73.02 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.