மும்பை: கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸின் பிடியில் இருந்த சர்வதேச சந்தைகள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளன. எனினும் சீனாவின் ஷாங்காய் மார்கெட் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் மட்டும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையிலும் குறீயீடுகள் சற்று ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 231 புள்ளிகள் ஏற்றம் கண்டு 41,198 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 12,129 ஆகவும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 0.11% ஏற்றம் கண்டு 71.25 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
கொரோனா வைரஸின் கவலைகளுக்கு மத்தியில் உலக சந்தைகள் சில நிவாரண நடவடிக்கைகளின் பின்னணியில் இன்று இந்திய சந்தைக்கு ஒரு நல்ல நாள் என்று தான் கூற வேண்டும். இன்று ரயில்வே சம்பந்தமான பங்குகளும் நல்ல சிறப்பாக வர்த்தகமாகின. ஏனெனில் பட்ஜெட்டில் துறை சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் மத்தியில் இந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
அதிலும் நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரதி இன்ஃப்ராடெல், நெஸ்டில், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஹெஸ்டிஎஃப்சி, யெஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டில், ஐடிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டிசிஎஸ், ஹெஸ்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் இருக்கும் என்று வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும் நாட்டில் வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், நிச்சயம் வளர்ச்சியை மீட்கும் நடவடிக்கை இருக்கலாம் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது.