நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் காலையிலேயே தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. இதற்கிடையில் முடிவில் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 949.32 புள்ளிகள் குறைந்து, 56,747.14 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 284.45 புள்ளிகள் குறைந்து, 16,912.25 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1,340 பங்குகள் ஏற்றத்திலும், 1,948 பங்குகள் சரிவிலும், 165 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ்கள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி மற்றும் பிஎஸ்இ டெக் குறியீடுகள் 2% மேலாக சரிவினைக் கண்டுள்ளன. இதுவே பி.எஸ்.இ கேப்பிட்டல் குட்ஸ் மட்டும் 1% கீழாகவும், மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் யுபிஎல் மட்டும் டாப் கெயினராகவும், இதே கோல் இந்தியா, இந்தஸிந்த் வங்கி, டாடா கன்சியூமர், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் டாப் கெயினராக எந்த நிறுவனமும் இல்லை. இதே இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ், பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்
அதெல்லாம் சரி ஏன் இந்த சரிவு? இன்றைய உச்ச விலையில் இருந்து பார்க்கும்போது சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து காணப்படுகின்றது. இது அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சம், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், வரவிருக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, குறிப்பிட்ட சில துறைகளின் வீழ்ச்சி, குறிப்பாக ஐடி, வங்கி துறை, ஆட்டோமொபைல் துறை, சேவை துறை, நிதித்துறை, மெட்டல்ஸ் மற்றும் பார்மா உள்ளிட்ட துறைகளும் சரிவில் காணப்படுகின்றன.
நிபுணர்களின் எதிர்பார்ப்பு
கடுமையான வீழ்ச்சிக்கு பிறகு நிச்சயம் ஒரு தடுமாற்றம் இருக்கலாம். இந்த நிலையானது தொடரலாம் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அதிகரித்து வரும் கொரோனாவில், சந்தைகள் மீண்டும் சரிந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தின் மத்தியிலேயே அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. ஆக வரவிருக்கும் நாட்களிலும் ஏற்ற இறக்கம் தொடரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒரே நாளில் ரூ. 4.28 லட்சம் கோடி அவுட்
இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் பிஎஸ்இ இன்டெக்ஸில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 256.74 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இன்று மட்டும் 4.28 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 261.02 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.