நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையில் சரிவில் தொடங்கி, முடிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 1,687.94 புள்ளிகள் அல்லது 2.87% குறைந்து, 57,107.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 509.80 புள்ளிகள் அல்லது 2.91%, குறைந்து, 17,026.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 964 பங்குகள் ஏற்றத்திலும் 2,163 பங்குகள் சரிவிலும், 80 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
மொத்த இன்டெக்ஸ் நிலவரத்தில் பிஎஸ்இ மெட்டல்ஸ் மிக மோசமாக 5% மேலாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி பிஎஸ்இ, நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் 4% மேலாக சரிவிலும், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாகவும் சரிவில் முடிவடைந்துள்ளன. இதே நிஃப்டி 50 பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி குறியீடுகள் 1% மேலாகவும் சரிவிலும் முடிவடைந்துள்ளன. இன்று தனிக்காடு ராஜாவாய் பிஎஸ்இ ஹெல்த்கேர் மட்டும் மாற்றமில்லாமல் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிவிஸ் லேப், நெஸ்டில், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
என்ன காரணம்
கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது குறையத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது சந்தையில் அதிகளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்திருந்தாலும், தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதுவும் சந்தையில் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பிளாக் பிரைடே எனலாம். ஏனெனில் சென்செக்ஸ் ஒரே நாளில் கிட்டதட்ட 1700 புள்ளிகள் சரிந்து முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் சிறுக சிறுக கிடைத்த லாபம் போயிருக்கலாம். இது ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவு எனலாம்.