இந்திய பங்கு சந்தையில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, தொடக்கத்திலேயே சரிவில் காணப்பட்டது. முடிவிலும் பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் 146.37 புள்ளிகள் அல்லது 0.24% குறைந்து, 60,600.94 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 33.60 புள்ளிகள் அல்லது 0.19% குறைந்து, 18,067.60 புள்ளிகளாகவும் தொடங்கியது.
முதலீட்டாளர்களின் உணர்வுகள்
சீனா தனது வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் மேம்படலாம் என்ற உணர்வுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனா பரவலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் காணப்பட்டது.
சந்தை முடிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 58 பைசா அதிகரித்து, 81.78 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே முடிவில் சென்செக்ஸ் 631.83 புள்ளிகள் அல்லது 1.04% குறைந்து, 60,115.48 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 187 புள்ளிகள் அல்லது 1.03% குறைந்து, 17,914.48 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1376 பங்குகள் ஏற்றத்திலும், 2027 பங்குகள் சரிவிலும், 152 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்றைய சந்தை அமர்வில் பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்பட்டன. குறிப்பாக நிப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் முடிவடைந்துள்ளன. இதில் பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி ஆட்டோ பெரியளவில் மாற்றமின்றியும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பவர் கிரிட் கார்ப், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அதானி எண்டர்பிரைசஸ், பார்தி ஏர்டெல், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், இந்தஸ் இந்த் வங்கி, ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
இன்று காலை நிலவரப்படியே சந்தையில் பி எஸ் இயின் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்வில் 282.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதனம், இன்று காலை நிலவரப்படி 2.07 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 280.92 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில் ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
அன்னிய முதலீடுகள்
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தைக்கு அன்னிய முதலீடுகள் வரத்தானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று 203.13 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1723.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஏற்ற இறக்கம் அதிகம்
இன்று சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்பட்டது. இந்திய சந்தையில் இன்று காலை முதலே சற்றே சரிவில் காணப்பட்ட நிலையில், முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.