பட்ஜெட் அறிவிப்புகள் வர்த்தகச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாகக் கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் சுமார் 4,000 புள்ளிகளும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் துவங்கிய நிலையில் 50,526.39 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியது.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 49,797.72 புள்ளிகளில் காலை வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் புதிய உச்சமான 50,526.39 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்நிலையில் வர்த்தக முடிவில் 458.03 புள்ளிகள் உயர்வில் 50,255.75 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 142.10 புள்ளிகள் உயர்வில் 14,789.95 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்டஸ்இந்த் வங்கி பங்குகள் அதிகப்படியாக 7.65 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனம் 6.28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் டாக்டர் ரெட்டி, சன்பார்மா, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து டிசிஎஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டாக் மஹிந்திரா, ஐடிசி, மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்கள் 0.12 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.