மும்பை: மீண்டும் சென்செக்ஸ் தன் 37,410 லெவல் ரெசிஸ்டென்ஸ்களைக் கடக்க முடியாமல் இறக்கம் கண்டு நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியான 37,328 புள்ளிகளைக் காலையில் கடந்தாலும், சுமார் 11 மணி வாக்கில் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. காலையில் வந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இறக்கம் கண்டு 37,060 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் கடந்த பல வர்த்தக நாட்களாக 37,000 மற்றும் 37,410 என்கிற இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில் ஃப்ளாட்டாக வர்த்தகமாகிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. கிட்ட தட்ட இது ஒரு கன்சாலிடேஷன் போலத் தான் தெரிகிறது. இந்த கன்சாலிடேஷன் காலம் முடிந்து ஒரு நல்ல ஏற்றம் அல்லது மோசமான இறக்கம் வரும் வரை இந்த இரண்டு புள்ளிகளும் மாறி மாறி சப்போர்ட் ரெசிஸ்டென்ஸாக இருந்து கொண்டே இருக்கும்.

சில வாரங்களுக்கு முன்பு தான், சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019, மே 14, 2019, ஆகஸ்ட் 01, 2019 ஆகிய மூன்று தேதிகளும் வலுவான ட்ரிபிள் பாட்டமாக அமைந்திருப்பதைச் சொன்னோம். மேலே சொன்ன மூன்று தேதிகளுக்கும் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. எனவே நாளையும் இறக்கம் கண்டால் 37,000 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், அதன் பின் 36,400 வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்வோம்.
வழக்கம் போல 37,410 சென்செக்ஸின் வலுவான ரெசிஸ்டென்ஸ் என மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,410 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அப்படிக் கடந்துவிட்டால், அதன் பின் 37,750 ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.
இன்று காலை சென்செக்ஸ் 37,298 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,060 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 267 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,018 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,918 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 98 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 39 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,626 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 627 பங்குகள் ஏற்றத்திலும், 1,849 பங்குகள் இறக்கத்திலும், 150 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,626 பங்குகளில் 22 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 395 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், அனைத்து துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. எனஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மெட்டல், மீடியா, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகள் போன்ற துறைகள் கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
மாருதி சுசூகி, ஹீரோமோட்டோகார்ப், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங், டாடா ஸ்டீல், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.55-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.01 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications