மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கொஞ்சம் வலுவடைந்து இருப்பது, பார்மா துறை சார்ந்து சில நல்ல விஷயங்கள் வந்து இருப்பது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து இருப்பது, ஒட்டு மொத்தமாக இந்திய பங்குச் சந்தைக்கு வெளிநாட்டு முதலீடுகள் 12.3 சதவிகிதம் அதிகரித்து இருப்பது, திவான் ஹவுசிங் நிறுவனம் வாங்கிய கடனில் ஒரு பெரும் பகுதியை திருப்பிக் கொடுத்தது போல சின்ன சின்னதாக பல நல்ல விஷயங்கள் சந்தையை இன்று மேல் நோக்கி எடுத்துச் சென்று இருக்கின்றன.
அதே நேரத்தில் ஆட்டோமொபைல் துறையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு இருப்பது, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 59 நாட்கள் வேலை இல்லா நாட்களாக அறிவிப்பு போன்ற கள சிக்கல்களுக்கு மத்தியிலும் சந்தை இன்று ஏற்றம் கண்டு இருப்பது கவனிக்கத்தக்கது. இப்போதும் சந்தை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், மொத்த சந்தையை வழி நடத்த ஒரு நல்ல வலுவான செய்தி, நல்ல மொமெண்டம் கொடுக்கக் கூடிய செய்தியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்படி ஒரு செய்தி நம் சந்தைக்கு கிடைக்கவே இல்லை.
சரி இப்போதைக்கு இந்த ஏற்றம் தொடர்ந்தால் 37,410 முதல் நிலை ரெசிஸ்டென்ஸாகவும், 37,750 இரண்டாவது மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கும். ஒருவேளை நாளை நெகட்டிவ் செய்திகள் வந்து இறக்கம் காணத் தொடங்கினால் வழக்கம் போல 37,000 முதல் சப்போர்ட்டாகவும், 36,400 இரண்டாவது மற்றும் வலுவான சப்போர்ட்டாகவும் இருக்கும். மாய எண் 37,410. இந்த புள்ளிகளைக் கடந்து, தொடர்ச்சியாக ஏழு வர்த்தக நாட்களாவது சென்செக்ஸ் நிறைவு அடைய வேண்டும். அப்போது தான் இந்த ரெசிஸ்டென்ஸ்ஸை சந்தை உடைத்ததாக எடுத்துக் கொள்ள முடியும். இல்லை என்றால் மீண்டும் மீண்டும் சந்தை 37,410 உடன் மோதிக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்.
இன்று காலை சென்செக்ஸ் 36,969 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,145 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 163 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,936 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,000 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 56 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,719 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,605 பங்குகள் ஏற்றத்திலும், 933 பங்குகள் இறக்கத்திலும், 181 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,719 பங்குகளில் 53 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 135 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்ஃப்ராஸ்ட்ரக்சர், பொதுத் துறை வங்கிகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
மாருதி சுசூகி, யெஸ் பேங்க், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், யூபிஎல், மாருதி சுசூகி, லார்சன் அண்ட் ட்யூப்ரோ, கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஈஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.71-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.79 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.