மும்பை: இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, முதலில் பொருளாதார சரிவில் இருந்து மீள அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுத்து வந்த வரிச் சலுகைகளை நீட்டிக்க திட்டமிட்டுக் கொண்டு இருப்பது, சில வங்கிகள் தங்கள் எம் சி எல் ஆர் கடன் விகிதங்களை மாற்றி அமைத்து இருப்பது, லுபின் பார்மாவுக்கு Fosaprepitant என்கிற மருந்தை தயாரிக்க அனுமதி கிடைத்து இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்தது, சில தனியார் வங்கிப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி கம்பெனிகளின் லாபம், ஆர்டர்கள் போன்ற காரணத்தால் பங்கு விலை அதிகரித்தது என பல காரணங்கள் இன்று சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
நீண்ட நாட்கள் கழித்து சந்தை கொஞ்சம் நல்ல செய்திகளால் மேல் நோக்கி சீராக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய சந்தைகளைப் பிடித்திருந்த கெட்ட நேரம் விட்டு விட்டதா இல்லை வேறு சில காரணிகளால் சந்தை இன்னும் இறக்கத்தை சந்திக்குமா என தற்போது இருக்கும் உலக பொருளாதார சூழலில் கணிக்க முடியவில்லை எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இப்போது வரை சந்தையை வழி நடத்தும் அளவுக்கு நல்ல மொமெண்டம் உள்ள செய்திகள் எதுவும் வரவில்லை. ஆக சென்செக்ஸ் நாளையும் இறக்கம் ஏற்றம் காணத் தொடங்கினால் டே சார்ட் படி 37,000 ஒரு ரெசிஸ்டென்ஸாகவும், 37,410 இரண்டாவது மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஏன் 37,000 இன்னும் சில புள்ளிகள் தானே கடந்து விடாதா..? எனக் கேட்கிறீர்களா..! வெறும் 10 புள்ளிகள் தானே அது இன்றே தொட்டு வர்த்தகமாகி இருக்கலாமே..? ஏன் தொடவில்லை..? 37,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை தொடாததால் தான் அதை இன்னும் ஒரு ரெசிஸ்டென்ஸாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதோடு சனி ஞாயிறு என இரண்டு நாட்களுக்குள் எந்த மாதிரியான அரசு அறிவிப்புகள், உலக பொருளாதார காரணிகள் வந்து நம் இந்திய சந்தையை ஆட்டுவிக்கத் தொடங்கலாம் ஆகையால் 37,000 இன்னும் ஒரு ரெசிஸ்டென்ஸ் புள்ளி தான் என்பதை மறக்க வேண்டாம்.
ஒரு வேளை இறக்கம் காணத் தொடங்கினால் வழக்கம் போல 36,400 புள்ளிகள் முதல் பெரிய சப்போர்ட்டாகவும், 36,000 அடுத்த பெரிய சப்போர்ட்டாகவும் இருக்கும்.
இன்று காலை சென்செக்ஸ் 36,785 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,981 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 337 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,883 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,946 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 98 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,658 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,589 பங்குகள் ஏற்றத்திலும், 915 பங்குகள் இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,658 பங்குகளில் 34 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 133 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, எனர்ஜி, மெட்டல், தனியார் வங்கிகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ரிலையன்ஸ், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி, டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. ஈஷர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இந்தியா புல்ஸ் ஹவுசிங், யெஸ் பேங்க், சன் பார்மா, விப்ரோ, ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.68-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.47 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.