2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை காரணமாகக் கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று மிகவும் மோசமாக 1077 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஐரோப்பிய சந்தை சரிவு
இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் இருந்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீடுகளை வெளியேற்றி வந்த நிலையில், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் இதன் அளவு மேலும் மோசமடைந்தது.
ஐரோப்பிய சந்தையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தொடர்ந்த நடைமுறையில் இருக்கும் காரணத்தால் ஐரோப்பிய சந்தை மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் உள்ளது.
முதலீட்டாளர்கள் மனநிலை
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிக்கைக்கு முன் தங்களது முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்துடனும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடனும் அதிகளவிலான பங்குகளை இன்று விற்பனை செய்துள்ளனர்.
இதனால் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரையிலும் பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிந்த காரணத்தால் அதிகப்படியாக 1077 புள்ளிகள் சரிந்து 47,269.60 புள்ளிகளை அடைந்தது. ஆனால் வர்த்தக முடிவில் சரிவின் அளவு கணிசமாக உயர்வடைந்து 937.66 புள்ளிகள் சரிவில் 47,409.93 புள்ளிகளை அடைந்தது.
நிப்டி குறியீடு
இதேபோல் நிப்டி குறியீடு வர்த்தக முடிவில் 271.40 புள்ளிகள் சரிந்து தனது வலிமையான 14,000 புள்ளிகளில் இருந்து சரிந்து 13,967.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகப்படியாக ஆக்சிஸ் வங்கி 4.05 சதவீத சரிவை அடைந்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, டைட்டன் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.
வங்கி பங்குகள் அதிகச் சரிவு
இந்நிலையில் டிசிஎஸ் 0.89%, எல் அண்ட் டி 0.12%, ஏர்டெல் 1.83%, ரிலையன்ஸ் 2.29% எனச் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.