ஹெச்டிஎஃப்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, ஒரு பங்குக்கு 15.5 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது.
இது 1550% ஆகும். தனியார் துறையை சேர்ந்த இந்த வங்கி கடந்த 2011ம் ஆண்டில் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16.50 ரூபாய் டிவிடெண்டாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதே கடந்த 2001ம் ஆண்டில் ஒரு பங்கிற்கு 22 ரூபாய் டிவிடெண்டாக அறிவத்திருந்தது.
11 ஆண்டுகள் கழித்து சர்பிரைஸ்
2011ம் ஆண்டிற்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இந்த டிவிடெண்ட் அறிவிப்பும் வந்துள்ளது. இது குறித்து இவ்வங்கி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது குறித்தான இறுதி அறிவிப்பானது மே 13 அன்று அறிவிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
23% லாபம் அதிகரிப்பு
இவ்வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் அதன் நிகர லாபம் 23% அதிகரித்து, 10,055.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வரிக்கு பிந்தைய லாபமானது 8187 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதன் வட்டி வருவாய் விகிதமானது 10.2 சதவீதம் அதிகரித்து, 18,872.70 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
வாரக்கடன் விகிதம் சரிவு
வட்டி வருவாய் அதிகரித்துள்ள அதே நேரம், இதன் வாராக்கடன் விகிதமானது, 1.17 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 1.26 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த ஆண்டில் 1.32 சதவீதமாகவும் இருந்தது. இது லாபம் அதிகரிப்பு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
தற்போதைய இருப்பு
மார்ச் 31, 2022 நிலவரப்படி, இவ்வங்கி 6342 கிளைகளையும், 3188 நகரங்களில் 18,130 ஏடிஎம், டெபாசிட் மெஷின்களையும் வைத்துள்ளது. இதில் நகரங்களில் 5608 கிளைகள் மற்றும் 16,087 ஏடிஎம் களையும் மார்ச் 31 நிலவரப்படி கொண்டுள்ளது.
பங்கு விலை நிலவரம்?
ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 1.36% குறைந்து, 1355.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1725 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1292 ரூபாயாகும். இதே பி.எஸ்.இ-யில் 1.37% குறைந்து, 1355.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. தற்போது டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சந்தை அமர்வில் இதன் எதிரொலி சந்தையில் இருக்கலாம்.